Tamilnadu

9 ஆண்டுகளாக வரதட்சணை கொடுமை.. மனைவியைக் கொன்று நாடகமாட திட்டமிட்ட கணவர் குடும்பம்.. திருவள்ளூரில் பகீர்!

திருவள்ளூர் சி.வி.என் சாலையில் வசித்து வருபவர் முருகன். இவர் பூக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மோகனப்பிரியா. இவர்களுக்குத் திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

திருமணம் ஆனதிலிருந்தே மோகனப்ரியாவிடம் வரதட்சணை கேட்டு முருகனும் அவரது குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தியதோடு அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். இந்த நிலையில் கணவனின் குடும்பத்தினரின் தொல்லை தாங்க முடியாமல் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மோகனப்பிரியா தனது தாய் வீட்டிற்குக் குழந்தைகளுடன் சென்றிருக்கிறார்.

அதன் பிறகு வீட்டை சுத்தம் செய்ய கணவர் வரச் சொன்னதாக கூறி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணவூரில் இருக்கும் தனது தாய் வீட்டில் இருந்து திருவள்ளூரில் இருக்கும் தனது கணவர் வீட்டிற்குச் சென்றுள்ளார் மோகனப் ப்ரியா.

மறுநாள் மாலை 6 மணியளவில் தனது பெற்றோருக்கு போன் செய்து பேசிய மோகனப் ப்ரியா, ‘தனக்கு உடல் நிலை சரியில்லை’ என கூறியிருக்கிறார். அதனால் மகளைப் பார்ப்பதற்காக மோகனப் பிரியாவின் பெற்றோர் மருமகனின் வீட்டிற்கு சென்ற நிலையில் மோகனப்பிரியாவின் கணவரும் அவரது உறவினர்களும் சேர்ந்து மோகனப் ப்ரியாவின் சடலத்தை அடக்கம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து உடனடியாக திருவள்ளூர் நகரக் காவல் நிலையத்திற்குச் சென்ற பெற்றோர்,மோகனப்பிரியாவின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், கணவர் முருகன் மற்றும் அவரது குடும்பத்தார் அனைவரும் அவரை அடித்துக் கொலை செய்துவிட்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக நாடகம் ஆடுவதாகவும் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதேபோல் முருகன் வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருப்பதாலும், இதைத் தட்டிக்கேட்ட மகளை அடித்துத் துன்புறுத்துவதாகவும், அடிக்கடி பணம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும் அதனால் முருகன், மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே சேர்ந்து எங்களது மகளை அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக மோகனப்பிரியாவின் உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

மேலும் தனது மகளைக் கொலை செய்த அவரது கணவர் முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வரை உடலை வாங்கமாட்டோம் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.