Tamilnadu

நிதி ஒதுக்கியும் முகத்துவாரத்தை தூர்வாராமல் இழுத்தடிப்பு.. காலநிலை மீது பழிபோடும் அதிமுக அரசு..!

பழவேற்காடு ஏரியும், கடலும் சந்திக்கும் முகத்துவார பகுதிகளை தூர்வார, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, திருவள்ளுர் மாவட்டம் பழவேற்காடு பகுதியை சேர்ந்த உஷா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்தை தூர்வார 27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய போதும், கடலின் மாறுபட்ட காலநிலை, காற்றின் வேகம் போன்ற காரணங்களால் முகத்துவாரத்தை தூர்வார முடியவில்லை.

மேலும், மணல்திட்டுகள் மீண்டும் உருவாகி விடுவதால், ஏரிக்குள் கடல் நீர் புகும் வகையில், முகத்துவாரத்தை நிரந்தரமாக திறக்க இயலவில்லை எனவும் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம்,நீர்ஆதாரங்களை தூர்வாரி பராமரிப்பது, ஆக்கிரமிப்புக்களை அகற்றுவது மாநில அரசின் கடமை என மத்திய அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக இரண்டு வாரங்களில் விளக்கமளிக்கும்படி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.