Tamilnadu

பணத்திற்காகத் தந்தையையே கொலை செய்த கொடூர மகன் - முன்னாள் அரசு அதிகாரிக்கு நடந்த சோகம்!

திருப்பத்தூர் மாவட்டம் பேராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் 82 வயதான ஓய்வு பெற்ற அரசு அதிகாரி பாலகிருஷ்ணன். இவர் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் கவ்லித்துறை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ராஜேஸ்வரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இவருக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகன் சேதுராமனைத் தவிர மற்ற அனைவரும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். சேதுராமன் மட்டும் அதே ஊரில் வேறு ஒரு தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.

ஓய்வு பெற்ற அரசு அதிகாரி பாலகிருஷ்ணன் உடன் துணைக்கு யாரும் இல்லாத நிலையில் பகல் நேரத்தில் சமைப்பதற்கும் துணி துவைப்பதற்கும் மட்டும் ஒரு உதவியாளரை வைத்துக்கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார் பாலகிருஷ்ணன். மேலும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான பாலகிருஷ்ணனுக்கு திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடிக்கணக்கான சொத்துகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை பாலகிருஷ்ணன் வீட்டை விட்டு வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் பாலகிருஷ்ணன் வீட்டுக் கதவைத் தட்டியுள்ளனர். கதவைத் திறக்காததால் வீட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளனர். அப்போது வீடு முழுவதும் மிளகாய்ப் பொடி தூவப்பட்டிருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்து வீட்டின் பின் பக்கமாகப் போய் பார்த்தபோது பாலகிருஷ்ணன் தலை மற்றும் கை பகுதிகளில் பலத்த வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் திருப்பத்தூர் தாலுகா போலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலிஸார், சடலத்தைக் கைப்பற்றித் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாலகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டது குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார், முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வீட்டில் உள்ள நகை பணத்திற்காகக் கொள்ளையர்கள் யாரேனும் கொலை செய்தனரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போலிஸார் அக்கம்பக்கத்தில் நடத்திய விசாரணையில், பாலகிருஷ்ணனுக்கும் அவரது இரண்டாவது மகன் சேதுராமனுக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்ததாகக் கூறியுள்ளனர்.

சம்பவம் நடந்த இரண்டு தினத்திற்கு முன்பாக சேதுராமனுக்கும் பாலகிருஷ்ணனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 4ஆம் தேதி இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பாட்டில் மற்றும் இரும்பு கம்பிகளோடு பாலகிருஷ்ணனின் வீட்டுக்கு வந்த சேதுராமன், அவரை பலமாக தாக்கி கொலை செய்துவிட்டு வீடு முழுக்க மிளகாய் பொடியை கரைசலை தூவிவிட்டு தப்பிச் சென்றது போலிஸாரின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்நிலையில் அவர் அளித்த வாக்குமூலத்தின் பேரில் தந்தையை கொலை செய்த சேதுராமன் மீது கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

முதியவரின் கடைசி காலத்தில் பராமரிக்க வேண்டிய மகனே, இப்படி சொத்துக்காகவும் பணத்திற்காகவும் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: ஆர்.எஸ்.எஸ் ஊழியர் படுகொலை வழக்கு : RSS அமைப்பை சேர்ந்த 9 பேருக்கு கேரள நீதிமன்றம் ஆயுள் தண்டனை!