எட்டு வருடங்களுக்கு முன்பு கொல்லத்தைச் சேர்ந்த கடவூர் ஜெகன் என்ற ஆர்.எஸ்.எஸ் ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அதே அமைப்பைச் சேர்ந்த 9 ஊழியர்களுக்குக் கொல்லம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊழியரான ஜெகன் கொல்லம் கடவூர் பகுதியில் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவருடைய மைத்துனரான ரகுநாத பிள்ளையும் தாக்கப்பட்டார். உடம்பில் 50 காயங்களுக்கு மேல் உள்ளான ஜெகன் உயிரிழந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த வினோத், கோபக்குமார், சுப்பிரமணியன், பிரியராஜ், பிரணவ், அருண், ரஜனீஷ், தினராஜ் மற்றும் ஷிஜு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்குக் கொல்லம் கூடுதல் குற்றவியல் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது.
ஆனால் அவர்கள் அனைவரும் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள். உடனே இவ்வழக்கு கொல்லம் குற்றவியல் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அப்படி மாற்றப்பட்ட வழக்கில்தான் தற்போது மீண்டும் ஆயுள் தண்டனை எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் வழங்கப்பட்டது. இந்த ஒன்பது பேரில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பதால் நடுவர் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தீர்ப்பளித்தார்.
ஆயுள் தண்டனை மட்டுமல்லாமல் 9 பேருக்கும் ரூபாய் 71,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் வன்முறை வெறியாட்டங்களை நிகழ்த்தி வருகிறது.
கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிக்காரர்களின் கொலை வழக்கில் கைது செய்யப்படும் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள், சக ஆர்.எஸ்.எஸ் ஊழியரையே கொலை செய்துள்ளது அந்த அமைப்பு எவ்வளவு வன்முறை வெறி நிறைந்ததாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.