Tamilnadu

கைவிரித்த அரசுகள்: கண்டுகொள்ளாத ‘ரீல்’ ஹீரோக்கள்: ரஷ்யாவில் தவித்த தமிழக மாணவர்களை மீட்டு வந்த சோனு சூட்!

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் காரணமாக வெளிமாநிலங்களுக்கு பணி நிமித்தமாக சென்றிருந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.

இதனிடையே, வேலையும் இல்லாமல், சாப்பிடுவதற்கு உணவும் கிடைக்காமல் அவதிப்பட்ட கூலித் தொழிலாளர்கள் வேறு வழியின்றி பல நூறு கிலோ மீட்டருக்கு கால்நடையாகவே நடந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். அப்போது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சுருண்டு விழுந்து உயிரிழந்த செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

ஆகையால், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்காக சுமார் 40 நாட்களுக்கு பிறகு கண்விழித்த மோடி அரசு ரயில் போக்குவரத்தை அறிவித்தது. அதிலும் பல்வேறு குளறுபடிகள், லஞ்ச லாவண்யங்களை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. வேலையே இல்லாமல் தவிக்கும் தொழிலாளர்களிடமே பயணச் செலவுக்கு கட்டணம் வசூலிப்பது கண்டனத்திற்குரியது என பல்வேறு எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இந்த நிலையில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி வில்லன் நடிகராக இருக்கும் சோனு சூட், சொந்தமாநிலங்களுக்குச் செல்லமுடியால் சிக்கித் தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை, தனது சொந்த செலவின் மூலம் பேருந்துகளை ஏற்பாடு செய்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.

அதுமட்டுமல்லது, வேலை இழந்து காய்கறி வியாபாரம் செய்த பெண்ணுக்கு மீண்டும் வேலை கிடைக்க ஏற்பாடு செய்தார். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.

இந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்திய மாணவர்கள் நாடு திரும்ப விமானம் ஏற்பாடு செய்து கொடுத்தார். அதன்படி, ரஸ்யா தலைநகர் மாஸ்கோவில் மருத்துவம் படிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 90 மாணவர்களை மீட்டு சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

கொரோனா தொற்று காரணமாக ஜூலை முதல் வாரத்திற்கு மாஸ்கோவிற்கு வந்தே பரத் விமானம் மற்றும் பிற விமானங்கள் அதன் பிறகு இயக்கப்பட்டவில்லை. இதனையடுத்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 90 பிளஸ் எம்.பி.பி.எஸ் பட்டதாரி மாணவர்கள் நடிகர் சோனு சூட்டிடம் உதவி கேட்டுள்ளனர்.

இதனையடுத்து ஆகஸ்ட் 4 ஆம் தேதி திட்டமிடப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக விமானத்தை ஏற்பாடு செய்தார் நடிகர் சோனு சூட். அதன்படி அனைவரும் இன்று பாதுகாப்பாக சென்னைக்கு திரும்பினர். அனைத்து மாணவர்களும் முழு மனதுடன் நடிகர் சோனு சூட்க்கு நன்றி தெரிவித்தனர்.

சோனு சூட். சினிமாவில் வில்லனாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக வலம் வருகிறார் என ரசிகர்களும், நெட்டிசன்களும் பாராட்டி வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

Also Read: “கர்நாடக தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்த வில்லன் நடிகர்” - நிஜ ஹீரோ என சோனு சூட்க்கு பாராட்டு!