Tamilnadu

ரூ.100 கோடிக்கு ஓபன் குவாரி டெண்டரால் அரசுக்கு நஷ்டம்: தடை விதிக்கக்கோரி செல்லக்குமார் எம்.பி. வழக்கு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 18 குவாரி டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கக்கோரி கிருஷ்ணகிரி நாடாளமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் சார்பில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட கருங்கல், ஜல்லி உள்ளிட்ட 18 குவாரிகளுக்கான டெண்டர் நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கடந்த மாதம் 6 தேதி வெளியிட்டார்.

அதன்படி பூர்த்தி செய்யப்பட்ட டெண்டர் விண்ணப்பங்கள் கிடைக்க நாளை (05.08.2020) இறுதி நாளாகும். டெண்டர் ஒப்பந்தங்களை ஆறாம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திறக்கப்படும் கலந்து கொள்ள நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் ஒரு மாவட்டத்தை விட்டு மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல முடியாதநிலை இருப்பதாகவும் தற்போது மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள ஓபன் டெண்டர் நடவடிக்கைகள் சிலருக்கு ஆதாயம் அமையும் வகையில் உள்ளது.100 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள இந்த 18 குவாரிகளுக்கான டெண்டர் நடவடிக்கைகளில் ஒரு சில குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே பங்கேற்று பயனடையம் வகையில் உள்ளது.

இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனவே ஓபன் டெண்டர் நடவடிக்கைகளை தடை விதிக்க வேண்டும் எனவும் இதனை கைவிட வேண்டும் எனக் கோரியும் கடந்த மாதம் 27 ஆம் தேதி கிருஷ்ணகிர மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளித்ததாகவும் ஆனால் இதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மத்திய அரசின் அனைத்து டெண்டர் நடவடிக்கைகளும் இ- டெண்டர் (மின்னணு டெண்டர்) முறையில் உள்ளது.

எனவே தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள ஓபன் டெண்டர் மூலமாக குறிப்பிட்ட சிலரை மட்டுமே அனுமதி அனுமதிக்க வாய்ப்புள்ளதாகவும், இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படும். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மின்னணு முறையில் டெண்டர் நடத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு அனுமதிக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி சாஹி தலைமையிலான அமர்வில் செல்லகுமார் தரப்பு வழக்கறிஞர் முறையீடு செய்தார். இதனையடுத்து மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர்.

Also Read: “டெண்டர் அறிவிப்பில் வெளிப்படைத்தன்மை மிக  அவசியம்” - அ.தி.மு.க அரசுக்கு உயர் நீதிமன்றம் குட்டு!