Tamilnadu
“தமிழகத்தில் தலைத்தூக்கும் துப்பாக்கி கலாசாரம்.. இது நல்லதல்ல” - அதிமுக அரசு மீது ஐகோர்ட் சரமாரி தாக்கு!
தமிழகத்தில் தற்போது துப்பாக்கி கலாசாரம் மெதுவாக பரவி வருவதாகவும், இது மாநிலத்துக்கும், நாட்டுக்கும் நல்லதல்ல எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளதுடன், பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை காட்டி கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டவரை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம் பரவி வருகிறது. குண்டர்கள், கிரிமினல்கள், அரசியல்வாதிகள் துப்பாக்கி உரிமம் வைத்திருக்கிறார்கள். இது சரியல்ல. பீஹார், ஜார்கண்ட்டில் இருந்து நாட்டு துப்பாக்கிகள் வருகின்றன என நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர், இதுபற்றி டி.ஜி.பி.,யிடம் தெரிவிப்பதாகக் கூறினார்.
உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகள் வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விட்டுவிட முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், நாட்டு துப்பாக்கிகள் பயன்படுத்தி கொள்ளையடித்ததாக பீஹாரைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
நாட்டு துப்பாக்கி பீஹாரில் இருந்து வந்திருக்கின்றன. தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் மெதுவாக பரவி வருகிறது. இது நாட்டுக்கும், மாநிலத்திக்கும் நல்லதல்ல. பீஹார், ஜார்கண்ட், சத்தீஸ்கரில் இருந்து நாட்டு துப்பாக்கிகள் தமிழகத்தில் ரவுடிகள், குண்டர்கள், அரசியல்வாதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்து துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
பின்னர், தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி., மற்றும் சென்னை காவல் ஆணையரை எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி பயன்படுத்தி கொள்ளையடித்ததாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? வட மாநிலங்களில் இருந்து உரிமம் இல்லாத துப்பாக்கிகள் எளிதாக கிடைக்கிறதா?
சட்டவிரோதமாக ஆயுதங்கள் விற்றதாக எத்தனை பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்? வெளிநாடுகளில் இருந்தும் ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? தமிழகத்தில் எத்தனை பேருக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டுள்ளது? உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்?
ரவுடி கும்பல் துப்பாக்கிகள் பெற்று கொலை, கொள்ளை, நில அபகரிப்பு குற்றத்தில் ஈடுபடுகின்றனரா? நக்ஸல்கள், சமூக விரோதிகளும், ஆயுதங்களை வைத்து சட்டம் –ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துகின்றனரா? என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
Also Read
-
பாஜகவின் முகத்தை தொடர்ந்து கிழிக்கும் துருவ் ரதி - பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டு !
-
இது தான் மோடி குடும்பமா? : குற்றவாளிகளை காப்பாற்றும் பா.ஜ.க.விற்கு குவியும் கண்டனங்கள்!
-
சந்திரசேகர் ராவ் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பின்னணி ?
-
விருதுநகர் வெடி விபத்தில் 3 பேர் பலி:முதலமைச்சர் இரங்கல் -அரசின் உதவி விரைந்து வழங்கப்படும் எனவும் உறுதி!
-
ஆபாச வீடியோ சர்ச்சை : “பிரஜ்வலை இந்தியா அழைத்து வர வேண்டும்...” - பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம் !