Tamilnadu

குடியிருப்பு கட்ட ஒதுக்கப்பட்ட ரூ.22 கோடி நிதியை ஜெயலலிதா நினைவிடம் கட்ட எடுத்த எடப்பாடி அரசு !

சென்னை மெரினா கடற்கரையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் உள்ளது. அந்த நினைவிடத்தை பினீக்ஸ் பறவை வடிவமைப்புடன் பிரம்மாண்ட அளவில் கட்டுவதற்காக அ.தி.மு.க அரசு முடிவு செய்து, சுமார் 50.08 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்தது.

இதனையடுத்து நினைவிடம் கட்டுமான பணி கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது. ஓராண்டிற்குள் முடிக்கவேண்டிய பணி காலதாமதமானதால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விட கூடுதல் நிதி தேவைப்பட்டது. இதனால் மீண்டும் பணிகளை வேகமாக முடிப்பதற்கு சுமார் 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால், ஒதுக்கப்பட்ட அந்த நிதியையும் தனியாக ஒதுக்கீடு செய்யாமல் சென்னை சைதாப்பேட்டை பகுதியில் அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்டுமான பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 93 கோடி ரூபாய் நிதியில் இருந்து மாற்றி எடுத்துள்ளது.

தற்போது அவசரமாக முடிக்கவேண்டிய தேவை இருப்பதால் அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்டுமான பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை எடுத்துக்கொண்டதாகவும் தமிழக அரசு அரசானை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஜெயலலிதா நினைவிடம் அமைக்க, ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகையான ரூ.50 கோடியே 80 லட்சத்துடன் தற்போது கூடுதலாக தேவைப்படும் ரூ.7 கோடியே 116 லட்சத்து 14 ஆயிரத்து 524க்கு நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது.

தற்போது ரூ.50.80 கோடியில் ரூ.35.13 கோடி செலவிடப்பட்டுள்ளது. செலவிடப்படாத மீதத் தொகை அரசுக்கு ஒப்படைப்பு செய்யப்பட்ட நிலையிலும் இக்கட்டுமானம் விரைவில் நிறைவு செய்யப்பட வேண்டிய நிலையிலும், 2020-21 வரவு செலவு திட்டத்தில் தாடண்டர் நகரில் அரசு ஊழியர் குடியிருப்பு அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் இருந்து ரூ.15 கோடியே 67 லட்சத்து 38 ஆயிரம் மறு ஒதுக்கீடு செய்யுமாறு முதன்மை தலைமை பொறியாளர் கேட்டு கொண்டுள்ளார்.

அவை அரசின் பரிசீலனைக்கு பின்னர் இக்கோரிக்கை ஏற்கப்படுகிறது. அதன்பேரில், கூடுதலாக வழங்க வேண்டிய ரூ.7 கோடியே 16 லட்சத்து 14 ஆயிரத்து 524 உடன் ரூ.15 கோடியே 67 லட்சத்து 38 ஆயிரம் சேர்த்து மொத்த தொகையான ரூ.22 கோடியே 83 லட்சத்து 52 ஆயிரத்து 524 தாடண்டர் நகர் அரசு ஊழியர் கட்டுமான பணிக்கான ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து மாற்றம் செய்யப்படுகிறது என அதில் தெரிவித்துள்ளனர். இது அரசு ஊழியர்கள் மத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்ய துணிந்துவிட்டதா அ.தி.மு.க அரசு?”- மு.க.ஸ்டாலின் விளாசல்!