Tamilnadu

அடுத்த 2 நாட்களுக்கு வட கடலோர தமிழகத்தில் கனமழை.. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வட கடலோர தமிழக மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் லேசான மழையும், சேலம், தர்மபுரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் நகரின் ஒரு சில பகுதிகளில் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்கள், கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூர் காவேரிப்பாக்கம், சேலம் ஏற்காடு தலா 7 செ.மீட்டர் மழையும், விழுப்புரத்தில் 6 செ.மீட்டர் மழையும், வேலூர் ஆலங்காயம், திருவள்ளூர் தாமரைப்பாக்கம், திருவண்ணாமலை சேத்ப்பட் பகுதிகளில் தலா 5 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவருக்கு எச்சரிக்கை

அடுத்த ஐந்து தினங்களுக்கு மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அதேபோல, அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், கடலோர கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.