Tamilnadu

“தமிழர்களை மீட்க ஆகஸ்டில் 127 விமானங்கள் இயக்கப்படும்” - தி.மு.க தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு ஒப்புதல்!

கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு தாயகம் அழைத்துவர தி.மு.க சார்பில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கில், மேலும் 127 விமானங்களை இயக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் தாயகம் மீட்டுவரக்கோரி தி.மு.க சார்பில் கழக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த நீதிப் பேராணை (ரிட் மனு) மீதான இன்றையவிசாரணையின்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், 'வந்தே பாரத்' திட்டத்தின்கீழ் 20.7.2020 முதல் 05.08.2020 வரை தமிழகத்திற்கு இயக்கப்படவுள்ள விமானச் சேவைகள் குறித்த அட்டவணையைச் சமர்ப்பித்தார்.

அதில், சென்னைக்கு 41, திருச்சிக்கு 11, கோயம்புத்தூருக்கு 4, மதுரைக்கு 2 என தமிழகத்துக்கு மொத்தம் 58 விமானங்கள் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், கடந்த 4.7.2020 அன்று மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ஆவணங்களின்படி, 25,939 பயணிகளை மீட்க இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட 149 விமானங்களில் 58 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள இந்தியர்களை மீட்பதற்கான விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

இதற்கு அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தி.மு.க சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் அவர்கள் ஆஜரான இவ்வழக்கில், ஏற்கனவே பல்வேறு உத்தரவுகளின் பேரில்,

06.06.2020 முதல் 10.07.2020 வரை - 63 விமானங்களும்

01.07.2020 முதல் 20.07.2020 வரை - 38 விமானங்களும்,

20.07.2020 முதல் 05.08.2020 வரை - 58 விமானங்களும்,

05.08.2020 முதல் 31.08.2020 வரை - 127 விமானங்களும் இயக்கப்படுகின்றன.

நீதிப் பேராணை (ரிட் மனு) எண். 8224 தாக்கல் செய்யப்பட்ட பிறகு 286 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

மாண்புமிகு நீதியரசர்கள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசின் இந்த ஒப்புதலைப் பதிவுசெய்து கொண்டதோடு, அதற்குக் கீழ்ப்பணிந்து மத்திய அரசு நடந்துகொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், இவ்வழக்கில் நீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு மத்திய அரசு கீழ்ப்பணியவில்லை என்றால் நீதிமன்றத்தை நாட தி.மு.க.,விற்கு உரிமையுள்ளதாகத் தெரிவித்தனர்.

Also Read: “ஆகஸ்ட் 5 வரை தமிழகத்திற்கு 58 விமானங்கள் இயக்கப்படும்” - தி.மு.க தொடுத்த ரிட் மனுவில் மத்திய அரசு தகவல்!