Tamilnadu

“விவசாயி அணைக்கரை முத்துவின் உடலில் காயங்கள்” : நீதிமன்ற விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

தென்காசி மாவட்டம் வாகைக்குளம் கிராமத்தில் வசித்தவர் அணைக்கரை முத்து. இவருக்குச் சொந்தமான நிலத்தில் தோட்டத்தைச் சுற்றி மின்வேலி அமைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அதிகாரிகள் விசாரணைக்காக அவரை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், விசாரணைக்கு அழைத்துச் சென்ற அணைக்கரை முத்து திடீரென உயிரிழந்தாகக் கூறப்படுகிறது. வனத்துறையினர் விசாரணையின்போது தாக்கியதால் அணைக்கரை முத்து உயிரிழந்ததாகக் கூறி அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் அவரது மனைவி பாலம்மாள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், “எனது கணவர் அணைக்கரை முத்து வாகைகுளம் பகுதியில் விவசாயம் செய்துவந்தார். இந்த நிலையில் ஜூலை 22ஆம் தேதி இரவு 11 மணி அளவில் நெல்லை நாயகம் தலைமையில் முருகசாமி, சக்தி முருகன், பசுங்கிளி உள்ளிட்ட வனத்துறை அலுவலர்கள் வீட்டிற்கு வந்து எனது கணவரை விசாரிக்க வேண்டும் எனக் கூறி சிவசைலம் பகுதியில் உள்ள பங்களா குடியிருப்பு பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

இதையறிந்து எனது மகன் நடராஜன் சிவசைலம் பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு சென்றபோது எதிர்ப்புறத்தில் வன அலுவலர்கள் வாகனம் வந்துவிடவே உடனடியாக வாகனத்தில் ஏறுமாறு கூறியுள்ளனர். தொடர்ந்து, தென்காசி அரசு மருத்துவமனையில் கணவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

எனது கணவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்த நிலையில் திடீரென உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. இதன் அடிப்படையில் காவல் நிலையத்தில் ஜூலை 23ல் எனது மகன் நடராஜன் புகார் அளித்தார். நீதித்துறை நடுவர் விசாரணையில் 18 இடங்களில் வெளிப்புற காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் குடும்பத்தாரிடமும் நீதித்துறை நடுவர் கையெழுத்து பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் 23ஆம் தேதி இரவே அவசரமாக உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தடய அறிவியல் துறையின் தலைவர் டாக்டர் செல்வமுருகன் இருக்கும் நிலையில், அவரது தலைமையில் இல்லாமல் இந்த உடற்கூறு ஆய்வு நடைபெற்று உள்ளது. வனத்துறையினர் தாக்கியதன் காரணமாகவே கணவர் உயிரிழந்ததாக சந்தேகம் உள்ளது.

ஆகவே இவற்றைக் கருத்தில் கொண்டு உயிரிழந்த அணைக்கரை முத்துவின் உடலை தடய அறிவியல் துறை மருத்துவர் குழு பிரேத மறுபரிசோதனை செய்யவும், தொடர்புடைய வனத்துறை அலுவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவும், வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றவும், உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பாக விசாரணைக்கு வந்ததபோது விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்த விவகாரத்தில் மாலையில் உடற்கூறு ஆய்வு செய்தது ஏன்? மாலை 4 மணிக்கு மேல் உடற்கூறு சோதனை செய்யக் கூடாது என்ற உத்தரவு அணைக்கரை விவசாயி உடற்கூறு பரிசோதனையில் மீறப்பட்டதா? என்பது குறித்து நாளைக்கு நிலைஅறிக்கை, உடற்கூறு அறிக்கை, உடற்கூறு வீடியோ பதிவையும் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பொங்கியப்பன் உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து இன்று மீண்டும் கூடிய நீதிமன்றத்தில், அணைக்கரை முத்துவின் உடற்கூராய்வு அறிக்கை மற்றும் வீடியோ பதிவுடன், நிலை அறிக்கை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி, தமிழகத்தில் மாலை 4 மணிக்கு மேல் உடற்கூராய்வு செய்யக்கூடாது என ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கபப்ட்டுள்ள நிலையில், எவ்வாறு உடற்கூராய்வு செய்யப்பட்டது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு அரசுத்தரப்பில், நீதிமன்ற உத்தரவாக அல்ல; அறிவுரையாகவே வழங்கப்பட்டது. அணைக்கரை முத்துவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், சட்ட ஒழுங்கு பிரச்சனையை தவிர்க்கும் நோக்கிலேயே விரைவாக உடற்கூராய்வு செய்யப்பட்டது. அதுவும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரிலேயே செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டது எனத் தெரிவித்தார். பின்னர் நீதிபதி, “உடற்கூராய்வு அறிக்கையில் 4 இடங்களிலேயே காயம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது” என தெரிவித்து வழக்கு விசாரணை உத்தரவிற்காக நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Also Read: “அணைக்கரை முத்து உயிரிழந்த விவகாரத்தில் மாலையில் உடற்கூறு ஆய்வு செய்தது ஏன்?” : உயர் நீதிமன்றம் கேள்வி!