Tamilnadu

VHP தலைமை அலுவகத்தில் பணியில் ஈடுபட்ட போலிஸ் எஸ்.எஸ்.ஐ தற்கொலை : காரணம் என்ன? - அதிர்ச்சி தகவல்!

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எஸ்.எஸ்.ஐ சேகர். எஸ்.எஸ்.ஐ சேகருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். 1994ல் காவல்துறையில் காவலராகப் பணிக்குச் சேர்ந்த சேகர், தற்போது எஸ்.ஐயாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதனையடுத்து, சென்னை தி.நகரில் உள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைமை அலுவகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் பணிபுரியும் விஷ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்தின் பின்புறத்தில் காவலர்கள் ஓய்வு எடுப்பதற்கான அறை ஒன்று உள்ளது.

இந்நிலையில், அந்த அறைக்கு ஓய்வு எடுப்பதற்காக எஸ்.ஐ சேகர் நேற்று மாலை 5 மணியளவில் சென்றுள்ளார். அப்போது திடீரென எஸ்.ஐ சேகர் தங்கியிருந்த அறையில் இருந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் அந்த அறைக்குச் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது பாதுகாப்பிற்காக வைத்திருந்த தனது கைத்துப்பாக்கியால் சேகர் நெற்றியில் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனையடுத்து தி.நகர் போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் ரத்த வெள்ளத்தில் கிடந்த சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து அங்கு நடந்தப்பட்ட சோதனையில், கடிதம் ஒன்றை போலிஸார் கைப்பற்றியுள்ளனர். அந்தக் கடிதத்தில், வீட்டுக் கடனை கட்டமுடியாமல் போனதால் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக சேகர் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சேகர் பணியாற்றிய விஷ்வ ஹிந்து பரிஷத் அலுவலக ஊழியர்களிடமும் போலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர். சமீபகாலமாக போலிஸார் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே இத்தகைய பிரசசனைகளை முடிவுக்குக் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.