Tamilnadu

காதல் கணவருடன் தகராறு : ஏரியில் குதித்து இளம்பெண் தற்கொலை - ஆவடி அருகே சோகம்!

சென்னை ஆவடியை அடுத்த சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி, இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்கள் இருவரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் , 8 மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளனர்.

கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு காரணமாகப் பிரச்சினை ஏற்பட்டு வந்திருக்கிறது. அதனால் கடந்த 25ஆம் தேதி புவனேஸ்வரி தனது 8 மாதக் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

புவனேஸ்வரி அவர் தாய் வீட்டிற்குச் சென்றிருப்பார் எனக் கணவர் பாலாஜி நினைத்திருக்கிறார். ஆனால் மகள் குறித்து புவனேஸ்வரியின் தாய் பாலாஜியிடம் கேட்டபோதுதான் புவனேஸ்வரி அவர் தாய் வீட்டிற்குப் போகவில்லை எனத் தெரியவந்திருக்கிறது.

இந்தநிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள கோவிந்தன்தாங்கல் ஏரியில் சிவப்பு நிற ஆடையுடன் ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சடலத்தை மீட்ட போலிஸார் அந்தப் பெண்ணின் உறவினர்களை வரவழைத்து அந்த சடலம் புவனேஸ்வரிதான் என உறுதி செய்தனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற ஆவடி தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் ஏரியில் மிதந்த புவனேஸ்வரியின் சடலத்தை மீட்டனர். ஏரி முழுவதும் தேடியும் 8 மாத குழந்தை கிடைக்கவில்லை. இதனால் அந்தக் குழந்தையை வேறு யாருக்கேனும் புவனேஸ்வரி கொடுத்துவிட்டாரா என தெரியவில்லை.

அதைத் தொடர்ந்து ஆவடி சரக காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலிஸார் புவனேஸ்வரியின் செல்போன் அழைப்புகள் மற்றும் அதே பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இதற்கிடையே புவனேஸ்வரி தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்த டைரி போலிஸாரிடம் சிக்கியது. அதில் அவர், 'நான் சாகப் போகிறேன். ஏனென்றால் என் நன்னடத்தையை மற்றவர்கள் காயபடுத்துகின்றனர். எனது எல்லா பிரச்சினைகளையும் மறக்கக் கடவுளிடம் தினமும் காலையில் வேண்டிக்கொள்வேன். ஆனாலும் என்னை ஒரு ஜோக்கர் போலவே மற்றவர்கள் நடத்துகிறார்கள். அரசு இவர்களைப் போன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கணவர் பாலாஜி மற்றும் அவரது மாமியார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என உயிரிழந்த புவனேஸ்வரியின் தாயும் சகோதரரும் புகார் அளித்துள்ளனர்.

காதலித்த கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை, சுற்றியுள்ளவர்கள் நடந்துகொண்ட விதம் ஆகியவை காயப்படுத்தியதால் மனதளவில் பாதிப்படைந்த இளம்பெண் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆவடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: VHP தலைமை அலுவகத்தில் பணியில் ஈடுபட்ட போலிஸ் எஸ்.எஸ்.ஐ தற்கொலை : காரணம் என்ன? - அதிர்ச்சி தகவல்!