Tamilnadu

கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட போலிஸார் மீது வழக்கு தொடுத்ததால் பொய் வழக்கு போட்டு கடுமையாக தாக்கிய போலிஸ்!

கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும் தர்மபுரி மாவட்டம், பெரும்பாலை காவல் நிலையத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவில் உள்ள அசரகசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர், இளங்கோவன் என்பவரிடம் 40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அந்த தொகையை திருப்பிச் செலுத்தாததால், இளங்கோவன், பெரும்பாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சிவில் பிரச்னை தொடர்பான இந்தப் புகார் குறித்து விசாரிக்க காவல் நிலையத்துக்கு வரவழைத்த உதவி ஆய்வாளர்கள் மதியழகன், பெருமாள், சிவகுரு ஆகியோர், தன்னை மிரட்டி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதாகக் கூறி, பிரகாஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உதவி ஆய்வாளர்களுக்கு எதிரான புகாரை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க சேலம் டி.ஐ.ஜி-க்கும், தர்மபுரி எஸ்.பி-க்கும் உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று காவல் நிலையத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஒரே காரணத்துக்காக பிரகாஷ் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியும் உள்ளனர். இதையடுத்து தற்போது பிரகாஷ் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Also Read: “விசாரணைக்கு சென்ற முதியவர் உயிரிழப்பு”: தமிழகத்தில் அடுத்த லாக்கப் மரணம்? - தி.மு.க எம்.எல்.ஏ போராட்டம்!