Tamilnadu

“கொரோனா பெரும் துயரம் - மரித்துப்போன மனிதநேயம்”: குடும்பத்தினர் கைவிட்டதால் சாலையில் கிடந்த மூதாட்டிகள்!

இந்தியாவில் பரவி வரும் கொரோனா பாதிப்பால் அடித்தட்டு மக்கள் பெரும் துயரங்களை சந்தித்து வருகின்றனர். அதிலும் வயதான முதியவர்களும், ஆதரவற்றோர்களும் படும் வேதனைகள் பெரும் சோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இந்த சூழலில் குடும்பத்தினர் பலர் தங்களின் பொருளாதார சூழலை சமாளிக்க முடியாமல், வீட்டில் உள்ள முதியவர்களை நடுத் தெருவில் விட்டுச் சென்றுவிடுகின்றனர். அந்தவகையில் குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, சுய நினைவின்றி வீதியில் கிடந்த மூதாட்டிகளை சேவை மையம் மீட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் பாகாயம் பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில், எழுந்திருக்கக் கூட முடியாத நிலையில் இரண்டு மூதாட்டிகள் சாலையின் ஓரேத்தில் படுத்துக் கிடந்துள்ளனர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், மூதாட்டிகள் குறித்த தகவலை பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சேவை மைய நிர்வாகிகள் விரைந்து வந்து இரண்டு மூதாட்டிகளை மீட்டு தங்களது காரிலேயே வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். உடல்நிலையில் மோசமான நிலையில் இருந்த மூதாட்டிகளை மருத்துவர்கள் பரிசோதித்து சிகிச்சை அளித்துள்ளார். ஆனால் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகும் இருவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

மேலும் கொரோனா சூழல் காரணமாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைக்கு அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருவரையும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அங்குள்ள காப்பகத்தில் மூதாட்டிகள் 2 பேரையும் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்துக்கொண்டுத்துள்ளனர்.

மூதாட்டிகள் எப்படி வீதிக்கு வந்தார்கள் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில் இரண்டு பேரையும் இன்று காலை முதல்தான் இந்த பகுதியில் பார்த்ததாகவும், யாரோ இரவு நேரத்தில் வந்து விட்டுவிட்டுச் சென்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

மேலும் அவர்களின் குடும்பத்தினர் பற்றி தகவல் அறிந்து அவர்களிடம் விசாரணை நடத்தினால், உண்மைத் தெரியவரும் என்றும் குடும்பத்தினரே கைவிட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: கொரோனா ஊரடங்கால் தலைவிரித்தாடும் வறுமை - 62% குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்திய அவலம்!