Tamilnadu

“மதுரையில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை மறைத்து குளறுபடி” - சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு!

மதுரையில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கையை தமிழக அரசு மறைக்கிறதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "மதுரை மாவட்டத்தில் ஜூலை 15ஆம் தேதி வரை நிகழ்ந்துள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 129 என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், மதுரை தத்தநேரி மயானத்தில் ஜூலை 15ஆம் தேதிவரை கொரோனா நோயால் இறந்தவர்கள் 167 பேர் தகனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இறந்தவர்களில் பிறமாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 46 பேர்.

மதுரை கீரைத்துறை அஞ்சலி மின்மயானத்தில் ஜூலை15 ஆம் தேதி வரை கொரோனா நோயால் இறந்தவர்கள் 57 பேர் தகனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

மதுரை மாவட்டத்தில் இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலமான மையவாடியில் கொரோனா நோயால் இறந்தவர்கள் 39 பேர் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பிறமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 8 பேர்.

இஸ்லாமிய அமைப்புகளால் பிற இடங்களில் நல்லடக்கம்செய்யப்பட்ட இஸ்லாமியரல்லாதவர்களின் எண்ணிக்கை 2.

கிருஷ்துவ கல்லறைத்தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 (முழுவிபரமும் கிடைத்தால் இன்னும் அதிகரிக்கும்)

மொத்தத்தில் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 67 பேர் நீங்கலாக, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 205 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்ததாக மயானம், அடக்கஸ்தலம், கல்லறைத்தோட்டம் ஆகியவற்றின் விபரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் தமிழக அரசோ 129 பேர்தான் மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறந்ததாக அறிவித்துள்ளது.

மூன்றில் ஒரு பங்கு மரணத்தை (76 பேர்) மறைக்கிறதா தமிழக அரசு? உண்மை நிலையென்ன என்பதை உடனடியாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: இன்று ஒரே நாளில் 5,106 பேர் டிஸ்சார்ஜ்... பாதிப்பு எண்ணிக்கையும் இதுவரை காணாத உயர்வு! #CoronaUpdates