Tamilnadu

“நோய் எதிர்ப்புத்திறனை சோதிக்க ரேபிட் கருவிகளை பயன்படுத்தலாமே?” - திமுக MLA மனுவுக்கு அரசு பதிலளிக்க ஆணை!

திருப்பரங்குன்றம் தொகுதியின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்துள்ளார். அதில், "தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.  தற்போதைய சூழலில் ஒவ்வொருவரையும் பரிசோதிப்பது என்பது அவசியம்.

ரேபிட் கருவிகள் மூலம் அனைவரையும் பரிசோதித்து நோய் எதிர்ப்பு அளவையும் அளவீடு செய்யலாம். அதன் அடிப்படையில் நோயெதிர்ப்பு குறைவாக உள்ளவர்களை PCR பரிசோதனைக்கு உட்படுத்தலாம். ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அங்கீகரிக்கும்  நிறுவனங்களிடமிருந்து ரேபிட் கருவிகளை வாங்கி, தனிப்பட்ட நோய் எதிர்ப்பு திறனையும் பரிசோதிக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ரேபிட் கருவிகளை பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

அதற்கு அரசு தரப்பில் கொரோனா நோய்த்தொற்றை உறுதிசெய்யும் முறையான பரிசோதனையாக பி.சி.ஆர் சோதனைகளே உள்ளன என குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தை நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கில் எதிர் மனுதாரராக சேர்ப்பதாகவும், வழக்கு தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தமிழக அரசுத் தரப்பில் பதில் மனுக்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Also Read: வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்குவதில் என்ன சிரமம்? - எடப்பாடி அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!