Tamilnadu

“உடல் உறுப்புகளை தானம் செய்கிறேன்” : தீராத வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் கிராமத்தில் வசிக்கும் முத்துசாமி - ஜெயக்கொடி தம்பதியரின் மகள் ஷோபனாவிற்கும், விருந்தாசலம் அருகே எறுமனூரை சேர்ந்த அன்பழகன் - செல்வராணி தம்பதியரின் மகன் விஜயகுமாருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது 50 சவரன் நகை மற்றும் 1 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனங்களையும், வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வரதட்சணையாக பெண் வீட்டார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் மணவாழ்க்கையில் நிறைவுடன் வாழ்ந்து வந்த விஜயகுமாருக்கு - ஷோபனாவிற்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்துள்ளது. சென்னையில் ஐ.டி. கம்பெனியில் 50,000 ரூபாய் ஊதியத்தில் பணியாற்றி வந்த விஜயகுமார் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையிழந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

வீட்டிலிருந்த விஜயகுமாரின் செல்போனுக்கு ஈரோட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அழைத்துள்ளார். ஷோபனா செல்போனை எடுத்து பேசிய போது விஜயகுமாரின் காதலி என்று பேசத்தொடங்கிய அந்தப் பெண் , 41 நிமிட உரையாடலில் விஜயகுமாரின் மொத்த காதல் விளையாட்டுகளையும் தெரிவித்த நிலையில், அதனைக் கேட்ட ஷோபனா கடும் மனக்குழப்பத்துக்கு ஆளாகியுள்ளார்.

தூக்கத்தில் இருந்து விழித்ததும் தனது காதல் ரகசியம் அம்பலமானது அறிந்து அதிர்ச்சி அடைந்த விஜயகுமார் அதனை மறைக்க கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது. கணவனின் செயலால் கடும் வேதனையடைந்த ஷோபனா விபரீத முடிவை எடுத்தார்.

தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர் தன்னுடைய செல்போனில் இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். ஒன்றில் தன் கணவர் ஒரு பெண்ணுடன் வைத்திருந்த தொடர்பு குறித்தும், மாமியார் வரதட்சணை கேட்டு அடித்து உதைத்து கொடுமைப்படுத்துவது குறித்தும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

மற்றொரு வீடியோவில், தன்னை கணவர் அடிக்கும்போது , வீட்டுக்குள் சென்று அறையை பூட்டி அடிக்கச்சொல்லி மாமியார் தூண்டியதாக வேதனையுடன் தெரிவித்த ஷோபனா, தனது ஒரு வயதுக் குழந்தையை தன்னை சிறுவயதில் பார்த்துக்கொண்டது போல பார்த்துக்கொள்ளுமாறு தனது தாய்க்கு கண்ணீர்மல்க கோரிக்கை வைத்துள்ளார்.

அதுமட்டுமன்றி தன்னுடைய அப்பா இறந்த இடத்தின் அருகே தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் தனது தாயிடம் உருக்கமாகத் தெரிவித்துவிட்டு, தனது உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறும் கூறியுள்ள ஷோபனா, தனது இறப்புக்குக் காரணமானவர்களை விட்டுவிடாதீர்கள் எனவும் கூறி அதனை தனது உறவினர்களுக்கு அனுப்பி வைத்து விட்டு புதன்கிழமை காலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இதனையடுத்து ஷோபனா வெளியிட்ட இரண்டு வீடியோக்கள் மற்றும் விஜயகுமாரின் கள்ளக்காதலி உடன் ஷோபனா பேசிய உரையாடலையும் வைத்து விருத்தாசலம் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: “காதலன் திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றியதால் இளம்பெண் தற்கொலை” : சேலத்தில் நடந்தச் சோகச் சம்பவம்..