Tamilnadu

‘மாட்டுத்தீவன வண்டி’என ஸ்டிக்கர் ஒட்டி 1,000 கிலோ குட்கா கடத்தல்: ஆளும் கட்சி முக்கிய புள்ளிக்கு தொடர்பு?

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ரெங்கநாதபுரம் கிராமத்தில் போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த மினி லாரிகள், கார் உள்ளிட்டவற்றை போலிஸார் மறித்து சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான 1,000 கிலோ புகையிலை பொருட்கள், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் போலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது . மேலும் கடத்தல்காரர்களிடம் இருந்து சுமார் 11 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் போலிஸார் பறிமுதல் செய்தனர்.

போலிஸார் சோதனையில் ஈடுபட்டிருந்த போது காரில் வந்தவர்கள் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. அதில் மன்னார்குடியை சேர்ந்த வைரவன், புதுக்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணியன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். போலிஸார் நடத்திய விசாரணையில் புதுக்கோட்டையிலிருந்து போதைப்பொருட்கள் எடுத்து வருவதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரிகள், ஒரு கார் உள்ளிட்ட வாகனங்களை போலிஸார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் பயன்படுத்தப்பட்ட மினி லாரியில் போலிஸாருக்கு சந்தேகம் வரகூடாது என்பதற்காக மாட்டுத்தீவன வண்டி என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.

மேலும் இந்த கடத்தல் சம்பவம் குறித்து தலையாமங்கலம் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாது இதன் பின்னணியில், ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய புள்ளியின் துணையுடன் இது நடந்திருப்பதாகவும் போலிஸ் வட்டாரங்கள் சந்தேகிக்கிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: “தங்களை கொடூரமாக தாக்கியதாக கண்ணீர் வடித்தார்”: பென்னிக்ஸ், ஜெயராஜுடன் சிறையில் இருந்த கைதி வாக்குமூலம்!