Tamilnadu

“ஊரடங்கில் வழங்கப்பட்ட நிவாரணங்கள் குறித்து பதிலளிக்க வேண்டும்” : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தேசிய மக்கள் கட்சியின் நிர்வாகியும், வழக்கறிஞருமான எம்.எல்.ரவி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் ஊரடங்கின் காரணமாக தமிழக அரசு, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தலா ரூபாய் ஆயிரம் வழங்கியுள்ளது, ஒரு குடும்பத்தை சமாளிக்க ஆயிரம் ரூபாய் போதுமானதாக இல்லை என குறிப்பிடுள்ளார்.

தமிழக அரசு அறிவித்த நிவாரண தொகை அமைப்புசாரா தொழிலாளர்கள் பலருக்கு இன்னும் போய் சேரவில்லை என்றும், கடந்த 2015ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்ட போது ரூ.5 ஆயிரம் நிவாரணம் மற்றும் 20 கிலோ அரிசி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் திருவிழாவின் போதுகூட ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது என்று மனுவில் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஜப்பான் 20 சதவீதமும் அமெரிக்க 15 சதவீதமும் நிவாரணமாக வழங்குவதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்தியாவில், ஜி.டிபி.,யில் ஒரு சதவீதத்தை மட்டுமே வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஊரடங்கு நீடித்து கொண்டிருக்கக்கூடிய வேளையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நல வாரியங்களின் மூலம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் குறித்து விரிவாக பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Also Read: “வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டும் அ.தி.மு.க நிர்வாகி” - போலிஸில் புகார் அளித்த பெண் வியாபாரி!