Tamilnadu

"3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், வட தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருக்கழுக்குன்றத்தில் 9 செ.மீ மழையும், கேளம்பாக்கத்தில் 8 செ.மீ மழையும், சென்னை விமான நிலையத்தில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கும், பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் கர்நாடக கேரள கடலோர பகுதிகளில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளுக்கு ஜூலை 15, 16 தேதிகளுக்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.