Tamilnadu

14 வயது சிறுமி எரித்துக் கொலை - ஒரே வாரத்தில் பொசுக்கப்பட்ட இரண்டாவது பிஞ்சு!

தமிழகத்தில் குழந்தைகள் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வரும் நிலையில், கடந்த 10 நாட்கள் இரண்டாவதாக 14 வயது சிறுமி ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பெரியசாமியின் மகள் கங்காதேவி. எட்டரை அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்றைய தினம், வீட்டில் உள்ள குப்பையை முள்காட்டில் கொட்டி விட்டு வருவதாகச் சென்ற சிறுமி, மாலை வரை வீடு திரும்பாத்தால், குடும்பத்தினர் அச்சமடைந்து, தேடத் தொடங்கினார்.

அப்போது தான் அந்த அதிர்ச்சிக் காட்சியை அவர்கள் பார்க்க நேரிட்டது. முள்காட்டில், எரிந்த நிலையில் சிறுமியின் உடல் இருப்பது தெரிய வந்தது. பிஞ்சு உடல் தீயில் கருகிப் போனதை பார்த்து பெற்றோர் துடிதுடித்து போயினர்.

தகவல் அறிந்த மாவட்ட டி.ஐ.ஜி ஆனி விஜயா, மாவட்ட எஸ்.பி ஜியாவுல் ஹக் உள்ளிட்ட காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

முதல் கட்ட விசாரணையில் சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்று தெரிய வரும்.

இந்நிலையில், சிறுமியின் உடலை முதலில் கண்டுபிடித்த உறவினர்கள் இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு நபர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

புதுக்கோட்டை அருகே 7 வயது சிறுமி ஜெயப்பிரியா பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொன்று வீசப்பட்ட சம்பவத்தில் இருந்து தமிழகம் மீளாத நிலையில், சிறுமி கங்காதேவியின் கொலை, தமிழகத்தில் குழந்தைகளும் பெண்களும் வாழ பாதுகாப்பற்ற மாநிலமாக உணரவைக்கிறது.