Tamilnadu

“போலிஸ் அராஜகத்தால் மயங்கி விழுந்த பெண்” - மனிதாபிமானமற்ற வகையில் செயல்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு!

உடல்நலம் குன்றியவரை மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது போலிஸார் வழிமறித்து வாகனத்தை பறிமுதல் செய்ததால் நோயாளி மயங்கி விழுந்து ஒரு மணிநேரம் போராடிய சம்பவம் மணலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலி பெரிய தோப்பு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனது தாயார் ராணிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் இருசக்கர வாகனத்தில் மணலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது மணலி மார்க்கெட் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலிஸார் பிரகாஷின் இருசக்கரவாகனத்தை வழிமறித்து காரணங்களை கேட்காமல் வாகனத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.

மருத்துவமனைக்குச் செல்கிறோம் என்று கூறினாலும் அதற்கு உண்டான மருந்துச் சீட்டுகள் இல்லை என்பதைக் காரணம் காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு மணி நேரமாக நீடித்த வாக்குவாதத்தில் உடல்நிலை சரியில்லாத ராணி மயங்கி விழுந்துள்ளார்.

அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே ஆம்புலன்ஸுக்கு தகவல் கூறி வரவழைக்க வேண்டும் என பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் போக்குவரத்து போலிஸார் அலட்சியமாக நடந்துகொண்டதால் பொதுமக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

பின்னர், அங்கிருந்த மக்கள் ஒன்றுகூடவே வேறுவழியில்லாமல் ஆம்புலன்ஸை வரவழைத்து ராணியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்த இருசக்கர வாகனத்தை பிரகாஷிடம் ஒப்படைத்தனர் .

உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர்களிடம் போக்குவரத்து போலிஸார் மனிதாபிமானமற்ற வகையில் நடந்துகொண்டது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, மக்களின் மீது காவல்துறையினர் பிரயோகித்து வரும் அடக்குமுறை நடவடிக்கைகளை மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளன.

Also Read: சென்னையிலும் போலிஸ் அடாவடி : மருந்து வாங்கச் சென்ற இளைஞர் மீது தாக்குதல் - மனித உரிமை ஆணையம் கண்டனம்!