Tamilnadu

தனியார் பள்ளிக் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கக் கோரி வழக்கு: பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

கொரோனா ஊரடங்கு காரணமாக பிறப்பிக்கப்பட்டு, அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கல்விக் கட்டணம் செலுத்தும்படி, பெற்றோரை நிர்பந்திக்கக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், தனியார் பள்ளியில் படிக்கக் கூடிய மாணவ மாணவிகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த அடைக்கல அன்னை சபை சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், அரசுப் பள்ளிகள் போல, தனியார் பள்ளிகளுக்கு இலவச பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

ஏற்கனவே கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அரசு தனியார் பள்ளிகளுக்கு நிதி உதவி அளித்து உள்ள நிலையில், குழந்தைகளுடைய தொடர் கல்விக்கு வழி வகைகள், அரசு கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மற்ற துறையினருக்கு நிவாரணம் வழங்கப்பட்டதுபோல, இந்த ஆண்டு மட்டும் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக மனுதாரர், அரசிடம் கோரிக்கையை தெரிவிக்க வேண்டும் என்றும் அரசு அது தொடர்பாக பரிசீலித்து ஜூலை 8ம் தேதி பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

Also Read: “ஒப்புக்கு ஆன்லைன் சேவை: முதல்வர் பேட்டியில் ஒன்று, செயலில் வேறொன்று”-சுகாதாரத்துறையால் கர்ப்பிணி வேதனை!