Tamilnadu

குட்கா பதுக்கியதற்கு தண்டனை: புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ5 லட்சம் செலுத்துக - நீதிமன்றம் நூதன அபராதம்

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தனியார் குடோனில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில் 8 லட்சத்து 40 ஆயிரம் பாக்கெட்டுகள் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அங்கிருந்து அதன் உரிமையாளரும், உதவியாளரும் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் மாதவன் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணகிரி மாவட்ட மத்தகிரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாதவன் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்

அதில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என தெளிவாக தெரிவித்துள்ளனர். அதனால் தவறுதலாக வழக்கில சேர்க்கப்பட்டதால் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், மனுதாரர் சென்னை அடையாரில் உள்ள கேன்சர் நிறுவனத்துக்கு 5 லட்சம் ரூபாயை 4 வாரத்தில் வழங்க வேண்டும் எனவும், வேலூர் மேஜிஸ்திரேட்டிடம் 10 ஆயிரம் ரூபாய்க்கான தனிநபர் உத்திரவாதமும், அதே தொகைக்கான இருநபர் உத்தரவாதமும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், சம்மந்தப்பட்ட காவல்நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு 4 வாரத்திற்கு நேரில் ஆஜராகி கையெப்பம் இட வேண்டும், சாட்சிகளை கலைக்க கூடாது, தலைமறைவாக கூடாது என்ற நிபந்தனையில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Also Read: தனியார் பள்ளிக் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கக் கோரி வழக்கு: பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!