Tamilnadu

“சக போலிஸார் வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் மிரட்டுகின்றனர்” - மன உளைச்சலால் பெண் காவலர் தற்கொலை!

சக போலிஸார் தன்னிடம் வாங்கிய கடனை திருப்பித் தராததால் பெண் காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆண்டவர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பவானி (வயது 34). இவர் வையம்பட்டி காவல் நிலையத்தில் முதல்நிலை பெண் போலிஸாக பணியாற்றி வந்தார்.

கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்படவே, பவானி தனது கணவரை பிரிந்து, தனது மகளுடன் சகோதரி ஆனந்தி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 28-ம் தேதி எலி பேஸ்ட்டை குளிர்பானத்தில் கலந்து குடித்துள்ளார்.

பின்னர் அவராகவே தான் விஷம் குடித்துள்ளதாகக் கூறி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பவானி விஷம் குடிக்கும் முன்பே செல்போனில் ஒரு வீடியோவைப் பதிவு செய்திருக்கிறார். அந்த வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அதில், கடந்த 2013-ம் ஆண்டு திருச்சியில் பணியாற்றியபோது, தன்னுடன் பணியாற்றிய 2 போலிஸாரிடம் சுமார் ரூ.4 லட்சம் வரை கடன் கொடுத்ததாகவும், பலமுறை கேட்டும், அவர்கள் பணத்தைத் திருப்பித் தராமல் தன்னை மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கடந்த இரண்டு நாள்களாக காய்ச்சல், தலைவலி மற்றும் வயிற்றுப்போக்கு என கொரோனா அறிகுறிகள் தென்படுவதால், கடன் கொடுத்த பணத்தைப் பெறமுடியாத விரக்தியில் மனமுடைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சக போலிஸார், வாங்கிய கடனைத் திருப்பித் தராததால் பெண் காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “ஜெயராஜ், பென்னிக்ஸை விடிய விடிய லத்தியால் அடித்த சாத்தான்குளம் போலிஸ்” - தலைமை பெண் காவலர் சாட்சியம்!