Tamilnadu

80 காவலர்களுக்கு உளவியல் நடத்தை சிகிச்சை - தொடர் புகாரை அடுத்து திருச்சி டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் உத்தரவு!

திருச்சி சரகத்தில் பொதுமக்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட 80 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் அதிரடி உத்தரவு.

காவல் பணியில் மக்களிடம் அவர்கள் நடந்து கொண்டு முறை மீது புகார்கள் எழுந்ததன் அடிப்படையில் இந்த 80 பேர் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. இவர்களின் நடத்தையை சீர் செய்யப்பட வேண்டிய தேவை இருப்பதாகவும், அதற்காக பிரத்யேகமான அறிவாற்றல் நடத்தை சிகிச்சைக்கு ( Cognitive Behavioural Therapy) உட்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

அந்த சிகிச்சை முடியும் வரை, இந்த காவலர்கள் மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டதுள்ளது. சிகிச்சை முடிந்து அதில் அவர்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே களப்பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

பொதுமக்களிடம் இருந்து வந்த தொடர் புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எனவும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் போலிஸால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின் காவல் துறையினரின் மன ஆரோக்கியம், விவாதப் பொருளாகியது. அதன் தொடர்ச்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.