Tamilnadu

உடுமலையில் அதிகரித்த கொரோனா பாதிப்பு: அமைச்சர் ராதாகிருஷ்ணன் இல்லத் திருமண விழாவில் கூடிய கூட்டம் காரணமா?

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்தும், தடியடி நடத்தியும் வருகின்றனர். இதுவரை ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சாமானியர்கள் மீது தாக்குதல் நடத்தும் போலிஸார் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களை விட்டுவிடுகின்றனர். திருமண நிகழ்ச்சியில் 50 பேருக்கு மேல் விருந்தினர்கள் கூடுவதற்கு அனுமதியில்லை என தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அமைச்சர் வீட்டுத் திருமணத்தில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது மக்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த 11ம் தேதி கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனின் மகள் ஜெய பிரனிதாக்கும், பொள்ளாச்சி நகர முன்னாள் துணைத் தலைவர் விஜயகுமாரின் மகன் ஆதித்யனுக்கும் கோலார்பட்டி பெருமாள் கோவிலில் திருமணம் நடந்தது.

கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளாகும் அச்சமின்றி பிரம்மாண்டமாக நடந்த திருமணத்தில் 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், உறவினர்கள் என கூட்டம் கூட்டமாக ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டுனர்.

குறிப்பாக சென்னையில் கொரோனா உச்சம் தொட்ட நிலையில், அங்கிருந்தும் ஏராளமான அதிகாரிகள் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டனர். அதனால் தற்போது திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புக்கு அமைச்சர் ராதாகிருஷ்ணன் இல்லத் திருமண விழாவில் கூடிய கூட்டமே காரணம் என பொதுமக்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சேகரித்து அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Also Read: “இந்தபக்கம் சீனாவை புறக்கணிப்போம் கோஷம்; அந்தப்பக்கம் சீன நிறுவனங்களிடம் நிதி”: மோடி அரசின் இரட்டை வேடம்!