Tamilnadu

“அடுத்த லாக்கப் டெத்துக்கு ஆள் கிடைச்சிருச்சு” : போலிஸாரின் பகிரங்க மிரட்டல் - அதிர்ச்சியில் பொதுமக்கள்!

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்ற போலிஸார் கோவில்பட்டி சிறையில் வைத்து கொடூரமாகத் தாக்கியதில் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

போலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் ஏற்பட்ட இருவர் உயிரிழப்புச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. தற்போது இந்திய அளவில் இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது.

போலிஸாரின் மிருகத்தனமான செயலை பொதுமக்களும், பல்வேறு தரப்பினரும் கண்டித்து வருகின்றனர். நடவடிக்கை எடுக்கவேண்டிய அரசோ, பணியிடைநீக்கம் மட்டும் செய்து குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே, பால் முகவர்களுக்கும் போலிஸாருக்கும் ஏற்படும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வரை போலிஸார் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்யமாட்டோம் என பால் முகவர்கள் சங்கம் அறிவித்தது.

இந்நிலையில், போலிஸார் சிலர் சாத்தான்குளம் படுகொலையை ஆதரிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளம் லாக்கப் படுகொலையை ஆதரிக்கும் விதமாகவும், வணிகர்களை அச்சுறுத்தும் விதமாகவும் இழிவான வகையில் சமூக வலைதளங்களில் சில போலிஸார் பதிவிட்டு வருவது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனிதாபிமானமற்ற முறையில் மக்களை மிரட்டும் இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை வலுத்து வருகிறது.

Also Read: "இப்படியும் ஒரு போலிஸ்" : உயிரிழந்த சாலையோரவாசியின் உடலை இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்த இன்ஸ்பெக்டர்!