Tamilnadu

“மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு தடை : மீண்டும் ஊரடங்கு தீவிரம்” - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை முதல் 30-ம் தேதி வரை மாவட்டங்களுக்கிடையே பயணிப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்பட 5 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடையே உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 87 லட்சம் பேர் வசிப்பதால் கொரோனா தொற்று வேகமாகப் பரவிவருகிறது.

சென்னையில் மக்கள் நெருக்கம் காரணமாக கொரோனா பரவல் வேகமாக உள்ளது. சென்னையில் 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் நாளை முதல் 30-ம் தேதி வரை வேறு மாவட்டங்களுக்குச் செல்லத் தடை விதிக்கப்படுகிறது. பொதுப் போக்குவரத்து, தனிப்பட்ட முறையில் கார், இருசக்கர வாகனங்களில் செல்வதற்கும் தடைவிதிக்கப்படுகிறது. பிற மாவட்டங்களுக்குச் செல்ல இ-பாஸ் கட்டாயம்.

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மதுரை மாநகர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: மதுரையிலும் அமலானது முழு ஊரடங்கு: மீண்டும் மாநிலம் தழுவிய லாக்டவுனுக்கு தயாராகிறதா தமிழகம்? #CoronaCrisis