Tamilnadu

“இன்று வீட்டை விட்டு வெளியே வந்தாலே கைது?” - அதிதீவிர ஊரடங்கால் கெடுபிடி காட்டும் சென்னை போலிஸ்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாள்தோறும் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

கொரானா வைரஸ் நோய் தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக கடந்த 88 நாட்களாக நீடித்து வரும் ஊரடங்கு உத்தரவினால் பல்வேறுபட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அத்தியாவசிய கடைகள் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தீவிரமடைந்துள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு 12 நாட்கள் ஜூன் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இன்று ஒரு நாள் நள்ளிரவு வரை எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளான காய்கறி கடைகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள் எதுவுமே இயங்காமல் முழு ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் சென்னையில் திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு அத்தியாவசிய கடைகள் கூட திறக்கப்படாமல் வெறிச்சோடி காணப்படுகின்றன. திருவொற்றியூர் நெடுஞ்சாலை எண்ணூர் விரைவு சாலை சூரியநாராயண சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி காட்சி அளிக்கின்றன.

இந்நிலையில் சாலைகளில் சுற்றித் திரிபவர்களும், வீட்டு வாசலில் அமர்ந்து கதை பேசுபவர்களும், முக கவசம் அணியாமல் வெளியில் நிற்பவர்களையும் சென்னை போலிஸார் விரட்டியடித்தனர். இதனிடையே வீட்டு மொட்டை மாடியில் இருந்து படம் பிடித்த இளைஞர் ஒருவரின் செல்போனை வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி பறிமுதல் செய்து எச்சரித்து அனுப்பினர்.

முழு ஊரடங்கும் போதும் மக்கள் அச்சப்படாமல் சாலைகளில் சுற்றித் திரிவதை போலிஸார் கட்டுப்படுத்துவதற்காக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒருவர் இரண்டு பேர் சாலையில் நடந்து சென்றாலும் போலிஸார் அவர்களை எச்சரித்து விரட்டி அடித்துள்ளனர். நோய்தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள இன்று ஒரு நாள் ஊரடங்கு மக்கள் முழு ஆதரவு அளித்து வீட்டில் முடங்கி இருப்பதால் சென்னையே வெறிச்சோடி காணப்படுகிறது.

Also Read: “கடவுளுக்குத்தான் தெரியுமாம்” - அரசின் கையாளாகாத்தனத்தை வெளிப்படுத்திப் பேசிய முதல்வர் எடப்பாடி!