Tamilnadu

“தமிழகத்தில் நூறு சதவீத ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை”: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் !

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த சென்னையில் மட்டும் ஊரடங்கை தீவிரமாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் பரவி வருகின்றன.

இதனிடையே சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்துவது தொடர்பான பொதுநல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு, சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருப்பதால், ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் ஏதும் அரசிடம் உள்ளதா? என்று அரசு வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணனிடம் கேள்வியெழுப்பினர்.

மேலும், தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் மாற்றம் ஏதும் கொண்டு வரும் திட்டம் அரசிடம் உள்ளதா? எனவும் வினா எழுப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் அளிக்கவும் அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதுதொடர்பாக நீதிமன்றம் இந்த வழக்கையும் விசாரணைக்கு எடுக்கவில்லை எனவும், தமிழக குடிமக்கள் என்ற முறையிலும், பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும் இக்கேள்வியை எழுப்புவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், இதுசம்பந்தமாக அரசின் கருத்தை அறிந்து இன்று தெரிவிப்பதாகக் கூறியிருந்தார்.

இதனையடுத்து இன்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அமர்வு, வழக்குகளை விசாரித்து முடித்த நிலையில், தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், சென்னையில் கொரோனா தொற்று உறுதி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால், ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை எனத் தெரிவித்தார். மேலும், நிலைமையை தமிழக அரசின் குழு, தற்போது ஆய்வு செய்து வருவதாகவும், சென்னையிலோ, தமிழகத்திலோ முழு ஊரடங்கு அறிவிக்கும் திட்டம் ஏதுமில்லை எனவும் அவர் விளக்கம் அளித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சென்னையில் இருந்து மக்கள் வெளியே செல்வது தடுக்கப்பட்டுள்ளதாகவும், இ-பாஸ்கள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகிறதே, அவை உண்மையா? எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், அப்படி எந்த தடையும் விதி்கப்படவில்லை. அனைத்தும் வதந்திகள். இபாஸ்கள் தொடர்ந்து வழங்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர்கள் இ பாஸ்கள் வழங்கி வருகின்றனர் எனத் தெரிவித்தார்.

Also Read: “வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க திட்டம் என்ன?” : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!