Tamilnadu

“காதல் திருமணம் செய்து வைத்த நண்பரை வெட்டிக் கொலை செய்த கொடூரம்”: அ.தி.மு.க-வின் முக்கிய புள்ளி தலைமறைவு!

மதுரை மாவட்டம் தபால் தந்தி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 8ம் தேதி தனது பகுதியில் உள்ள ஒருதோட்டத்தில் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அவருடன் இருந்த நண்பர்கள் இரண்டு பேரை உணவு வாங்க கடைக்கு அனுப்பிவைத்துவிட்டு சக்திவேல், பிரகாஷ் என்ற இரண்டு நண்பர்களும் மணிகண்டனுடன் இருந்துள்ளனர். இந்நிலையில் உணவு வாங்கிவிட்டு திரும்பி வந்த போது மணிகண்டன் மற்றும் இருவரும் அங்கு இல்லாததால் அருகில் தேட ஆரம்பித்தனர்.

அப்போது மது அருந்திய இடத்திற்கு அருகில் இருந்த வயலில் கொடூரமாக வெட்டப்பட்ட நிலையில் மணிகண்டன் கொலை செய்யப்பட்டுக்கிடந்துள்ளார். இதனியடுத்து தகவலறிந்து வந்த போலிஸார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விஜயன்

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார் விசாரணையைத் துவங்கினர். அந்த விசாரணையில் கொலை செய்யப்பட்ட மணிகண்டனுக்கும் அ.தி.மு.க நகரச் செயலாளர் விஜயன் என்பவருக்கும் முன்பகை இருந்தது தெரியவந்தது. அந்த பகை குறித்து விசாரிக்கையில், மணிகண்டன் விஜயனின் மகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து வைத்ததாகத் தெரியவந்தது.

இந்த சம்பவத்திற்கு பிறகு மணிகண்டனை கொலை செய்யத் துடித்த விஜயன், அவரது நண்பர்கள் இருவரை வைத்தே கொலை செய்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆளும் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பதால் புகார் அளித்தும் குற்றவாளி விஜயனை போலிஸார் கைது செய்யாமல் அலட்சியம் காட்டி வருவதாக மணிகண்டனின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனிடையே குற்றவாளி தலைமறைவாகியுள்ளதால் அவரை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளதாக போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காதல் திருமணம் செய்து வைத்ததற்காக நண்பனை கொன்ற சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “பாம்பு கடியால் உயிரிழந்த இளம் பெண் - கணவரே திட்டமிட்டு கொலை” - வரதட்சணைக்காக கேரளாவில் நடந்த கொடூரம்!