Tamilnadu

“கொரோனா உயிரிழப்பில் அரசு குளறுபடி : 200க்கும் மேற்பட்ட மரணங்களை கணக்கில் எடுக்கவில்லை”- அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் மகாராஷ்டிராவின் மும்பைக்கு அடுத்தபடியாக, தமிழகத்தின் சென்னையிலேயே கொரோனாவால் தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 1,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் மொத்த பாதிப்பில் 90 சதவீதத்துக்கும் மேல் தலைநகர் சென்னையில் பதிவாகி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த 8ம் தேதி நிலவரப்படி சென்னையில் மட்டும் 224 உயிரிழப்புகள் பதிவானதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கு இருமடங்கிற்கும் அதிகமாக மொத்த உயிரிழப்பு 460 என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கடந்தவாரம் நடத்திய ஆய்வில் மாநில பதிவேட்டில் இருப்பதைவிட 236 பேர் அதிகமாக உயிரிழந்துள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த சுகாதார அலுவலர் பராமரித்து வரும் உயிரிழப்பு பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளனர்.

இந்த உயிரிழப்புகளை சேர்ந்தால் 0.7 சதவீதமாக இருக்கும் உயிரிழப்பு சதவீதம் சுமார் 1.5 சதவீதமாக இருக்கும். இதனிடையே சென்னை பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்த 20 பேர் குறித்த தகவலை கொரோனா தொடர்பான அதிகாரியிடம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரி பேட்டியளித்தார். அந்த பேட்டியின்போது, “கொரோனா பாதிப்பு காரணமாகல, மாநகராட்சி அலுவலகங்களில் போதிய ஊழியர் இல்லாததால், பிறப்பு / இறப்பு பதிவுகள் நடவடிக்கைகளில் சுணக்கம் உள்ளது. பிறப்பு, இறப்பு பதிவு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாலேயே இந்த குளறுபடி நிகழ்ந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அறப்போர் இயக்கத்தை சேர்ந்த ஜெயராமன் வெங்கடேசன், “அரசு மருத்துவக் கல்லூரிகள் நேரடியாக சுகாதாரத்துறையிடம் அறிக்கை அளித்து வருகின்றன. ஆனால், சுகாதாரத்துறையோ, 200 பேர் மரணம் குறித்த பட்டியலை சமர்ப்பிக்கவில்லை என்று மாநகராட்சியை குற்றம் சுமத்துகிறது. மருத்துவக்கல்லூரியில் நிகழ்ந்த மரணத்தை ஏன் அரசு சேர்க்கவில்லை?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: உயிரை பணயம் வைத்து பணி செய்யும் தூய்மைப் பணியாளர்கள் : 2 மாதமாக சம்பளம் வழங்காத அரசை எதிர்த்து போராட்டம்!