Tamilnadu

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத சபாநாயகர்: இன்று விசாரணைக்கு வருகிறது தி.மு.க. மனு!

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அ.தி.மு.க அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற புகார் மீது இதுவரை சபாநாயகர் நடவடிக்கை எடுக்காததால், ஓ.பி.எஸ், கே.பாண்டியராஜன் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

ஏற்கனவே மூன்று ஆண்டுகளாக தி.மு.க கொரடா சக்கரபாணி அளித்த புகாரின் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க வழக்குத் தொடர்ந்திருந்தது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் இறுதி விசாரணை நடத்தியது. அப்போது, சபாநாயகர் அந்த புகாரின் மீது நீண்ட நாட்களாக முடிவு எதுவும் எடுக்காமல் இருந்ததற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருப்பதாக சபாநாயகர் தரப்பில் கூறப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு கடந்த பிப் 14 ஆம் தேதி முடித்து வைக்கப்பட்டது.

தற்போது மூன்று மாதங்களுக்கு மேலாகியும் தி.மு.க புகார் மீது சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார். இதனைச் சுட்டிக்காட்டி தி.மு.க தரப்பில் புதிய மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசுக்கு எதிராக வாக்களித்த நபர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

Also Read: சென்னையில் மட்டுமே 398 பேர் கொரோனாவால் பலி... இறப்பு விகிதம் குறைவு என நாடகமாடும் எடப்பாடி அரசு!