Tamilnadu

பொதுத்தேர்வு நடத்த அடம்பிடிக்கும் அரசு: தனியார் பள்ளிகளின் 11ம் வகுப்பு கட்டணக் கொள்ளைக்குத் துணைபோகிறதா?

கொரோனா தொற்று தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. நோய்த் தொற்றைத் தடுப்பதிலும் - போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் உயிரிழப்புகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த சூழலில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வருகிற 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடத்த எடப்பாடி அரசு முடிவு செய்திருக்கிறது. இந்நிலையில், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்றால் மக்கள் கடுமையான இன்னல்களை சந்திக்கின்ற வேளையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள், பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரின் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த எதிர்ப்புகளை மீறி பொதுத் தேர்வுகளை நடத்த அதிமுக அரசு முயன்று வருகிறது.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக் கோரி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பாக வழக்குத்தொடப்பட்டு இன்று விசாரணைக்கு வந்தது. ஆசிரியர் சங்களின் வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், “9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் ஜூன் 15ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது. ஜூலை 2வது வாரத்தில் தேர்வு நடத்தலாமா?” என தெரிவிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசின் தரத்தை இழந்து தோல்வி அடைந்த அ.தி.மு.க அரசு மாணவர்களை தரத்தை சோதனை செய்ய தேர்வு நடத்துவது எந்தவிதத்தில் நியாயம் என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வைக் கட்டாயம் நடத்தியே தீருவது என்கிற வறட்டுப் பிடிவாதமாக இருக்கும் எடப்பாடி அரசு தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கும் துணைப்போய் தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது.

இது தொடர்பாக கல்வியாளர் ஒருவர் கூறுகையில், “தமிழகத்தில் அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டது. பல தனியார் கல்வி பள்ளிகள் இந்நேரம் 10 வகுப்பு முடிந்திருந்தால் தங்களின் வசூல் வேட்டையை 11ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையின் மூலம் நடத்தி முடிந்திருப்பார்கள்.

கொரோனா காரணமாக தேர்வுகள் தாமதமாக நடத்துவதால் தங்கள் வசூல் வேட்டையைத் தொடர்முடியாமல் போனதால் அரசிடம் உதவியை நாடியுள்ளார். குறிப்பாக தமிழகத்தில் கடந்தாண்டு சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகரங்கள் மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள பெரிய தனியார் பள்ளிகளில் 11ம் வகுப்புக்கு ரூ.40,000 முதல் ரூ.60,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில பள்ளிகளில் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தனியார் பள்ளிகள் அரசுக்குத் தெரியாமல் கட்டணக் கொள்ளையை நடத்தவில்லை. ஆட்சியாளர்களின் முழு ஒத்துழைப்புடன் தான் கட்டணக் கொள்ளையை அரங்கேற்றுகின்றன. ஆட்சியாளர்கள் கட்டணக் கொள்ளையின் பங்குதாரர்களாக மாறி விடுகின்றனர். இந்த கொள்ளை கொரோனாவால் தடைபட கூடாது என தனியார் பள்ளிகளின் முதலாளிகள் நினைக்க அவர்களின் மனம் நோகாமல் மாணவர்களின் நலன்களை நோகடிக்கவே அரசு இத்தகைய முயற்சியில் இறங்கியிருக்கிறது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 11ம் வகுப்பு சேர்க்கையை வைத்து மிகப் பெரிய மாபியா அரங்கேறுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

“டாஸ்மாக்கை திறப்பது போல், பொதுத்தேர்வை நடத்துவது எளிதல்ல” - அ.தி.மு.க அரசுக்கு உயர் நீதிமன்றம் குட்டு!இதனிடையே, ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் படிப்பு பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, ஆன்லைன் முறையில் பாடம் நடத்தப்படுகிறது. மக்கள் இந்த ஊரடங்கால் வருவாய் இழந்து தவிக்கும் நிலையில், பல தனியார் கல்வி நிறுவனங்கள் இப்போதே மழலையர் வகுப்புக்கு கட்டணங்களை வசூலித்து வருகின்றன.

ஊரடங்கு முடியும் வரை கல்விக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என அரசு கூறியதை ஏற்காத தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க புதுப்புது உத்திகளை கடைப்பிடித்து வருகின்றன. சில தனியார் பள்ளிகள் கட்டணத்தை வட்டியுடன் தவணையாக நிதி நிறுவனங்களில் செலுத்த கட்டாயப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அப்படி தவணை செலுத்தினால், வட்டி மட்டுமே 19 சதவீதத்துக்கு மேல் வந்து விடும். அதோடு பரிசீலனை கட்டணம் 3 சதவீதம் சேர்ந்து விடுகிறது. கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலைக்கு பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர் என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் நீதிமன்றம் இந்த விவகாரங்களில் தலையிட்டு கட்டணக் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: “டாஸ்மாக்கை திறப்பது போல், பொதுத்தேர்வை நடத்துவது எளிதல்ல” - அ.தி.மு.க அரசுக்கு உயர் நீதிமன்றம் குட்டு!