Tamilnadu
“50% மரணங்கள் மறைக்கப்பட்டதா? - உண்மையை மறைப்பதால் கொரோனாவைத் தடுக்க முடியாது” : முத்தரசன் ஆவேசம்!
கொரானா நோய் பெருந்தொற்று சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் குறித்த உண்மை நிலையை வெளிப்படையாக தெரிவித்து, நோயாளிகளை தனிமைப் படுத்தி அரசின் நேரடிப் பொறுப்பில் தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும் என தமிழக அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரானா நோய் பெருந்தொற்று பரவல் தடுப்புக்கு இதுவரை மருந்து கண்டு பிடிக்கப்படாததால், தனிநபர் இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட தனிநபர் நோய்தடுப்பு சாதனங்கள் அணிவது அவசியம் என வலியுறத்தப்படுகிறது. இத்துடன் நோய் தொற்று சமூக பரவல் ஆகாமல் தடுத்திட நாடு முடக்கம் செய்யப்பட்டு, ஊரடங்கு உத்தரவுகள் அமலாக்கப்பட்டுள்ளன.
மத்திய, மாநில அரசுகளின் இந்த நடவடிக்கைகளில் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை வாழ்க்கை அனுபவம் உணர்த்தியுள்ளது. நோய் தொற்று தடுப்பு கால நிவாரணமாக பாதிக்கப்பட்ட பகுதியினருக்கு மத்திய மாநில அரசுகள் அறிவித்த நிவாரண உதவிகள் நேரடி பலன் தரவில்லை. பாதிப்பில் இருந்து மீண்டு, மறு வாழ்க்கை தொடங்க உதவும் வகையில் நிவாரணம் அமையவில்லை. மாறாக மூன்று வேளை உணவுக்கும் வழியில்லாத வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், செதுபாவசத்திரம் அருகில் உள்ள இரண்டாம் புளிக்காடு என்ற ஊரில் வாழ்ந்த வரும் கூலித் தொழிலாளி கதிரவன் (30) தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருபவர். இவர் கடந்த 3 மாதங்களாக வேலை வாய்ப்பும், வருமானமும் இழந்த நிலையில் தனது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.
இதில் இரண்டு குழந்தைகளும் இறந்து விட்டன என்பதை தமிழ்நாடு அரசு அறிந்து கொள்ள வேண்டும். இதில் ‘குடும்ப பிரச்னை’ என திசை திருப்பி உண்மை நிலை மறைக்கப்படுகிறது. இலவச உணவு பொருள்களுடன் குடும்பத்திற்கு குறைந்தபட்சம் தலா ரூபாய் 5 ஆயிரம் கொரானா நெடுக்கடி கால நிவாரண நிதி வழங்கி இருந்தால் இது போன்ற துயரங்களை தடுத்திருக்க முடியும். இதேபோல் கொரானா நோய் பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை நாளாக நாளாக உண்மை நிலையை மறைத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை பெருநகரில் நாள் தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரானா நோய் பெருந்தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. ராஜீவ்காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் தலைமை செவிலியர் திருமதி ஜோன்மேரி பிரிசில்லா கொரானா மரணத்தை மறைக்க முயன்றது. பின்னர் செவிலியர் போராட்டத்தால் ஒப்புக் கொள்ளப்பட்டது. யுனானி மருத்துவர் அப்பிராஸ் பாஷா கொரானா மரணம் இதுவரை மறுக்கப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை அரசினர் மருத்துவமனைகளில் கொரானா நோய் தொற்றால் 398 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஆனால் இதில் 50 சதவீத மரணங்கள் மறைக்கப்பட்டுவிட்டன என்ற குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது.
கொரானா நோய் பெருந்தொற்று அறிகுறி இருக்கிறதா என பரிசோதிக்க வருபவர்கள் அனைவரையும் பரிசோதிக்க வேண்டாம், நோய் தொற்று பாதித்து, சிகிச்சை பெற்று வருபவர்களையும் திரும்ப, திரும்ப பரிசோதிக்க வேண்டாம் என வாய்மொழி உத்தரவு வழங்கியுள்ளதாக தெரிய வருகிறது.
உண்மை நிலவரத்தை மறைப்பதாலும், ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மறுப்பதும் கொரானா நோய் பெருந்தொற்றை தடுக்க முடியாது என்பதை தமிழ்நாடு அரசு உணர வேண்டும். இந்த நிலையிலாவது தமிழ்நாடு அரசு கொரானா நோய் பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஏற்பட்ட நெருக்கடிகளை சமாளிக்க ஏழை மக்களுக்கு தலா ரூபாய் 5 ஆயிரம் நிதி வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
ரூ.5000 பஞ்சாமிர்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு!
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 உயர்த்தி வழங்கப்படும் : முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!
-
“விஸ்வகுருவுக்கா இந்த நிலைமை? ; உலக நாடுகள் சிரித்திருக்க மாட்டார்களா?” : முரசொலி தலையங்கம்!
-
“1.31 கோடி பெண்களுக்கு ரூ.5,000 சிறப்பு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்...” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
“கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாடு தலைகுனியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!