Tamilnadu

“குடிமராமத்து பணியில் அதிமுக அரசு முறைகேடு”: வாய்கால்கள் தூர்வாரப்படாததால் தண்ணீர் கடலில் கலக்கும் அவலம்!

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் வரும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் பல கோடி ரூபாயில் தமிழகம் முழுவதும் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், தூர்வாரப்பாட்டுவதற்காக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தண்ணீர் திறக்க குறைந்த நாட்களே உள்ள நிலையில், அரசு முன்கூட்டியே ஆறுகள், வாய்க்கால்கள், தூர்வாரப்பாட்டாமல் கடைசி நேரத்தில் தூர்வாருவதால் பல லட்சம் கோடி ரூபாயை இந்த அரசங்கம் கொள்ளையடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்தில் கோரையாறு, பாமணியாறு, வெண்ணாறு உள்ளிட்ட பல ஆறுகளில் தமிழக அரசு முறையாக தூர்வாராமல் மக்கள் நடமாடும் இடங்களில் மட்டும் தூர்வாரிவிட்டு வருடம் தோறும் தமிழகம் முழுமையும் முறையாக தூர்வாரியதாக அதற்குறிய பணத்தை எடுத்து விடுகின்றனர்.

இதனால் காட்டாமணக்கு செடி, கருவமரங்கள், நானல்கள் காடுகளாக படர்ந்து இருப்பதினால் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மணல் திருட்டிற்கும் ஏற்ற பகுதிகளாக மாறிவருகிறது. முறையாக முழுவதும் ஆறுகள் , வாய்கால்கள் தூர்வாராத காரணத்தினால் வருகின்ற தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படாமல் வீனாக கடலில் சென்று காலக்கிறது என விவசாய சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.

இது குறித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கூறுகையில், “ஆறுகள் , வாய்க்கால்கள் முழுமையாக தூர்வாரிட வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். 10 ஆண்டுகளாக கோரையாற்றை முழுமையாக தூர்வாரவில்லை. தண்ணீர் வருவதற்கு 10 நாட்களுக்கு முன்பு தான் ஆறுகளை தூர்வாருவதற்கு இயந்திரத்தை இறக்குகிறார்கள்.

தண்ணீர் வந்தவுடன் இயந்திரத்தை எடுத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. ஆளுங்கட்சியினர் குடிமராமத்து பணியில் முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் அனைத்து ஆறுகளையும் தூர்வாரிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “மேட்டூர் அணை திறப்பதில் குளறுபடி செய்து விவசாயிகளுக்குத் துரோகம் செய்வது ஏன் ?” - மு.க ஸ்டாலின் ஆவேசம்