Tamilnadu

“வேலைக்கு வந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை” : அ.தி.மு.க முன்னாள் நகர செயலாளர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைப் பகுதியைச் சேர்ந்தவர் அ.தி.மு.க முன்னாள் நகர செயலாளர் குமார். இவர் தக்கலை பேருந்து நிலையம் அருகில் எலக்ட்ரானிக் கடை ஒன்றை நடத்தி வருகிறது.

இவரின் கடைக்கு நேற்றைய தினம் 21 வயதான இளம் பெண் ஒருவர் பணிக்குச் சேர்ந்துள்ளார். இந்நிலையில் பணிக்குச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு குமார் பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார்.

குமாரின் இத்தகைய நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டுள்ளார். அப்போது அமைதியாக இல்லாவிட்டால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக நேரிடும் என்று குமார் மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் தக்கலை காவல் நிலையத்தில் குமார் மீது புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் குமாரை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.