Tamilnadu

“மனிதாபிமான அடிப்படையில் அனுமதி வழங்க முடியாதா?”: நளினி, முருகன் வழக்கில் உயர்நீதிமன்றம் மீண்டும் கேள்வி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக நளினியின் தாய் பத்மா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், இருவரும் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் தினமும் 10 நிமிடம் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

மேலும் லண்டனில் உள்ள முருகனின் தங்கையுடனும் பேச அனுமதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே முருகனின் தந்தை காலமானபோது, அவரது உடலை வீடியோ கால் மூலம் பார்க்க முருகனுக்கு தமிழக அரசு அனுமதி மறுக்கப்பட்டதையும் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பேச சிறை விதிகளில் அனுமதி இல்லை எனவும், இந்தியாவுக்குள் உறவினர்களிடம் பேச அனுமதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் பத்மா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இவர்கள் இருவரையும் வீடியோ கால் மூலம் வெளிநாடுகளில் வசிப்பவர்களுடன் பேச அனுமதித்தால், அது சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படக் கூடும் என அரசுத்தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என்றும், அதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் வாதிட்டார்.

உறவினர்கள், நண்பர்கள், வழக்கறிஞர்களுடன் பேச சிறை விதிகளில் எந்த தடையும் இல்லை எனவும், மற்ற கைதிகளுக்கு அனுமதியளிக்கும் போது, முருகனுக்கும், நளினிக்கும் மட்டும் அனுமதி மறுப்பது அடிப்படை உரிமையை மீறிய செயல் எனவும் குற்றம் சாட்டினார். மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் பேச எந்த விதிகளும் தடை விதிக்க வில்லை எனவும், நீதிமன்றமும் தடை விதிக்க முடியாது என வலியுறுத்தினார்.

இதையடுத்து, நீதிபதி ஹேமலதா, சிறைகளில் மொபைல், சிம் கார்டு, சார்ஜர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜாமர் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது, கொரோனா காரணமாக கைதிகள் உறவினர்களுடன் பேச ஆன்ட்ராய்டு மொபைல்களை பயன்படுத்த அனுமதித்து அரசாணை ஏதும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா என அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாகக் கூறிய அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், உள்நாட்டில் வசிக்கும் உறவினர்களுடன் தான் பேச அனுமதிக்கப்படுகிறது எனவும், உறவினர்களுடன் தொலைப்பேசியில் பேசுவதை உரிமையாக கோர முடியாது எனவும், இதுசம்பந்தமாக முடிவெடுக்க சிறை கண்காணிப்பாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் வெளிநாடுகளில் வசிப்பவர்களுடன் பேச அனுமதி கோரும் இந்த வழக்கில் வெளியுறவு அமைச்சகத்தையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி கிருபாகரன், தாயுடனும், தங்கையுடனும் பேச அனுமதித்தால் சர்வதேச அளவில் தாக்கம் ஏற்படும் என கூறும் அரசு, அவர்களை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய போது சர்வதேச தாக்கம் குறித்து பரிசீலிக்கவில்லையா எனக் கேள்வி எழுப்பினார்.

விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் போனில் பேச தடை விதிப்பது நியாயமா? எனவும் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார். பின்னர், ராஜிவ் கொலை என எல்லாத்தையும் விட்டு விட்டு தந்தை மரணத்துக்கு பின் தாயுடன் பேச முருகனை அனுமதிக்க கூடாதா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி கிருபாகரன், வழக்கு விசாரணையை ஜூலை 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அப்போது, வெளியுறவு அமைச்சகத்தை சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Also Read: “ஃபோனில் பேசுவதால் என்ன பாதுகாப்பு குறைவு வந்துவிடும்?” - நளினி, முருகன் வழக்கில் ஐகோர்ட் அதிரடி கேள்வி!