Tamilnadu

“வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களுக்காக விமானங்களை தரையிறக்க உத்தரவிடவேண்டும்” - ஐகோர்ட்டில் தி.மு.க மனு!

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வர ஏதுவாக தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கக் கோரி தி.மு.க சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர விமானங்களை இயக்குவதற்கு நடைமுறைகளை மத்திய அரசு கடந்த 5ஆம் தேதி அறிவித்து இருந்தது. அதனடிப்படையில் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 60,942 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

மத்திய அரசின் அனுமதியைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலிருந்து அனைத்து மாநிலங்களுக்கும் விமான போக்குவரத்து துவங்கி உள்ளது. ஆனால் தமிழகத்தில் விமானப் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை இதை எதிர்த்து தி.மு.க சார்பில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில் மத்திய அரசின் உத்தரவை மீறும் வகையில் தமிழக அரசு விமானங்கள் இயக்க தடை விதித்துள்ளதால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உணவு, உறைவிடம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் கடந்த இரண்டு மாதங்களாக மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் அதிகாரத்தில் மாநில அரசு தலையிடமுடியாது எனவும் மத்திய அரசின் அதிகாரத்தை மீறி முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் உத்தரவை பின்பற்றி வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வர ஏதுவாக தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை மூத்த வழக்கறிஞர் வில்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: “தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தருக” - அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!