Tamilnadu

இதுவரை கொரோனா நிவாரண நிதி எவ்வளவு வந்துள்ளது? பயனடைந்தவர்கள் எத்தனை பேர்?- தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!

வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்ய, நிவாரண நிதியத்தை உருவாக்க மத்திய - மாநில அரசுகளுக்கு அரசியல் சாசனம் அதிகாரம் வழங்கியுள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவலைத் தடுக்கவும், ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்கு ஏதுவாகவும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க தொழிலதிபர்கள் தனிநபர்களுக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். அதன் அடிப்படையில் மக்கள், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

ஆனால் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான இணையதளத்தில், நன்கொடையாக வந்துள்ள தொகை எவ்வளவு? பயனாளிகள் எண்ணிக்கை எவ்வளவு? என்பன உள்ளிட்ட விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், முதல்வர் பொது நிவாரண நிதி இணையதளத்தில் மார்ச் மாதம் முதல் 38 ஆயிரத்து 849 பரிவர்த்தனைகள் மூலம் 20.47 கோடி ரூபாய் பங்களிப்பு பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் பத்திரிகைகளில் 306 கோடியே 42 லட்சம் ரூபாய் நன்கொடை வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். முதல்வர் பொது நிவாரண நிதி இணையதளத்தில், நிதி வழங்கியவர்கள் யார் யார்? பயனாளிகள் யார் யார்? என்பன உள்ளிட்ட எந்த விபரங்களும் குறிப்பிடப்படவில்லை என புகார் தெரிவித்துள்ளார்.

வெளிப்படைத் தன்மையை பேணும் வகையில் முதல்வரின் பொது நிவாரண நிதி இணையதளத்தில், பொதுமக்கள் அறிந்து கொள்ள, இந்த விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஜூன் 4ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

Also Read: “கடல் அலை போல், இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் கொரோனா தாக்கும்” - WHO அதிர்ச்சி தகவல்!