Tamilnadu
“இஸ்லாமியர்களுக்கு பாதுகாவலனாக தி.மு.க முன்னணியில் நிற்கும்” : மு.க.ஸ்டாலின் இரமலான் வாழ்த்து செய்தி!
சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம் நாளும் தழைத்திட இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரமலான் திருநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “
அன்பிற்கு இலக்கணமாக, இரக்கம் - கருணையின் அடையாளமாக, ஈகைக் குணத்தின் வெளிப்பாடாகத் திகழும் இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதயபூர்வமான இரமலான் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“கொரோனா” பேரிடர் காலத்தில் - “தனித்திருப்போம்” என்ற மருத்துவ நெறிமுறைகளைக் கடைப்பிடித்து - மிகுந்த நெருக்கடியிலும் - தங்களை வருத்திக் கொண்டு - நோன்பைக் கடைப்பிடித்துள்ள இஸ்லாமிய சமுதாய மக்களின் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும், திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் அயராது பாடுபட்டு வருகிறது என்பதை இஸ்லாமியர் அனைவரும் அறிவர். சமூக, பொருளாதார திட்டங்களையும், பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்து - அவற்றைத் திறம்பட கழக அரசு நிறைவேற்றியும் இருக்கிறது.
1969-ல் மிலாதுநபிக்கு முதன்முதலில் அரசு விடுமுறை; உருது பேசும் முஸ்லிம்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது; இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் சமுதாய மக்கள் பயனடைய "சிறுபான்மையினர் நல ஆணையம்" துவங்கியது; ஓய்வூதியம் பெற்று வந்த 2000 உலமாக்களின் எண்ணிக்கையை 2400 வரை உயர்த்தியது; முதன்முறையாக வக்ஃபு வாரியச் சொத்துகளைப் பராமரிப்பதற்கென 40 லட்சம் ரூபாய் மானியம் வழங்கியது என்று பல்வேறு சாதனைத் திட்டங்கள் அதில் அடங்கும்.
`தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்” “உருது அகாடமி” தொடங்கியது, "காயிதே மில்லத் மணிமண்டபம்" அமைத்திட நிதி ஒதுக்கி, அடிக்கல்லும் நாட்டி கட்டி முடிக்கத் தொடர் நடவடிக்கை எடுத்தது என்ற சாதனைகளுக்கு இடையே – இஸ்லாமியர்களுக்கு, பிற்படுத்தப்பட்டோருக்கான 30 விழுக்காட்டில் 3.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கியது கழக சாதனைகளுக்கு எல்லாம் மணிமகுடமாகும்!
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் - இஸ்லாமிய சமுதாயத்தினருக்குமான நல்லுறவு - பேரறிஞர் பெருந்தகை அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என நீடித்து நிலைத்து - தற்போதும் அது தொடர்ந்து வருகிறது. இஸ்லாமியர்களுக்கு என்ன சோதனை- எப்பக்கத்தில் இருந்து வந்தாலும், தப்பாமல் குரல் கொடுத்து - உரிமை போற்றும் உண்மைப் பாதுகாவலனாக திராவிட முன்னேற்றக் கழகம் முன்னணியில் நின்று வருகிறது.
ஒப்பற்ற இந்தச் சமுதாயத்தின் வாழ்க்கைத் தரமும் - நல்வாழ்வும் மேலும் உயர்ந்து, சிறப்பாக அமைந்திடவும், சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம் நாளும் தழைத்திடவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த இரமலான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்து மகிழ்ச்சி கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!