Tamilnadu

எடப்பாடி அரசின் ஊழல் குறித்து புகார் அளித்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கைது!

நங்கநல்லூரில் உள்ள தி.மு.க அமைப்பு செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியை இன்று அதிகாலை தேனாம்பேட்டை போலிசார் கைது செய்தனர். பிப்ரவரி 15ம் தேதி அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எஸ்.சி, எஸ்.டி.,க்கு தி.மு.க செய்த சாதனைகளை எடுத்துகூறும்போது தவறாக பேசியதாக எஸ்.டி அமைப்பு ஒன்று ஆர்.எஸ்.பாரதி மீது புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இன்று காலை அவரை கைதுசெய்துள்ளனர்.

அப்போது ஆர்.எஸ்.பாரதி எம்.பி செய்தியாளர் சந்திப்பில் கூறியது, “பிப்ரவரி 15ம் தேதி அன்பகத்தில் அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எஸ்.சி, எஸ்.டி.,க்கு தி.மு.க செய்த சாதனைகளை எடுத்துகூறும்போது தவறாக பேசிய வார்த்தை செய்திகள் வெளியிடப்பட்டு அதற்கு அடுத்த நாளே அதற்கு மன்னிப்பு விளக்கமும் மறுப்பும் வருத்தமும் தெரிவித்துவிட்டேன்.

இது நடைபெற்று இது நடந்து ஏறத்தாழ 100 நாட்கள் ஆகிவிட்டது. அதாவது கொரோனா தொற்று வருவதற்கு முன்பாக பேசினேன். ஆனால் கொரோனா இன்றைக்கு சென்னையில் உச்சகட்டத்தில் உள்ளது. 8 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் என்னை கைது செய்து சிறையில் வைக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. எனக்கு 71 வயதாகிறது. நானொரு டயாப்படிஸ் பேஷண்ட், ஹைபர்தென்ஷன் பேஷண்ட் இதை நான் எழுத்து பூர்வமாக வந்திருந்த காவல்துறை அதிகாரியிடம் தெரிவித்து உள்ளேன். அதுதான் நீதிமன்றத்திலும் சொல்ல உள்ளேன். சிறைச்சாலைக்கு நான் பயந்தவன் அல்ல; நான் மிசா காலத்தில் ஜெயிலில் இருந்தவன். கலைஞருடன் பலமுறை ஜெயிலில் இருந்தவன் என்பதால் இது புதிதல்ல.

ஆனால், இன்று தமிழகத்தில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்ற போது நேற்று மாலை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் மீதும் நான் ஒரு புகார் மனுவை விஜிலன்ஸ் துறையிடம் இடம் கொடுத்தேன். இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு என்னை கைது செய்கிறார்கள்.

உங்கள் மூலமாக எடப்பாடிக்கு தெரிவித்துக் கொள்வது இந்த குறைந்த நேரத்தில் கோயம்புத்தூர் நகராட்சியில் ஏறத்தாழ 200 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. 27 ரூபாய்க்கு வாங்கவேண்டிய வேப்ப எண்ணையை பல மடங்கு உயர்வு கொடுத்து வாங்கியிருக்கிறார்கள் இதையெல்லாம் வைத்துள்ளேன். இப்படிப்பட்ட ஊழல் புகார்களை கொடுக்கின்ற காரணத்தினால் என்னை கைது செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தூண்டி விட்டு என் மீது வழக்குப் போட சொல்லி இருக்கிறார்கள்.

இப்போது அதுமட்டுமல்ல இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு அந்த வழக்கு அரசு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதின் பேரில் 27ம் தேதி நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தகட்டத்தில் இப்போது என்னை கைது செய்திருக்கிறார்கள்.

இன்னொரு மனு இந்த எப்.ஐ.ஆரை ஸ்குவாஷ் செய்ய போடப்பட்டுள்ளது. அதுவும் நிலுவையில் உள்ளது. இப்படி இரண்டு நிலையில் இருக்கும் போது அவசர அவசரமாக கொரோனாவை தடுக்க நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக எங்களை போன்றோரை கைது செய்ய துடிக்கிறார்கள். அதைபற்றி கவலையில்லை, என் தலைவர் கலைஞர் 77 வது வயதில் கைது செய்யப்பட்ட நிலையில், நான் 71 வயதில் கைது செய்யப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “ஈழத்தமிழர் பெயரால் அரசியல் செய்வோருக்கு இடம்தர வேண்டாம்” - ஆர்.எஸ்.பாரதி வேண்டுகோள்!