Tamilnadu

“முரசொலி உள்ளிட்ட பத்திரிகைகள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகள் ரத்து” : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

தமிழக அரசு, முதல்வர், அமைச்சர்கள் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பேசியது குறித்து அவ்வப்போது தமிழக அரசு அவதூறு வழக்குகளை தமிழகம் முழுதும் தொடர்ந்து வருகிறது. தலைவர்களின் கருத்துகளை வெளியிட்டு தங்களுக்கு அவதூறு ஏற்படுத்தியதாக தினமலர், முரசொலி, தி ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, நக்கீரன் ஆகியவற்றின் மீதும் அவற்றின் ஆசிரியர்கள், மற்றும் நிர்வாகிகள் மீதும் வழக்கு தொடரப்பட்டது.

அதன்படி, 2012ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி முரசொலி நாளிதழ் மீது 20 வழக்குகளும், டைம்ஸ் ஆப் இந்தியா, தி ஹிந்து, நக்கீரன் மற்றும் தினமலர் மீது தலா 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது.

தமிழக அரசின் அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி அரசியல் கட்சியினர் தொடர்ந்த வழக்குகள், மக்கள் பிரதிநிதிகள் வழக்கு என்பதால் தனியாக பிரிக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் விசாரணையில் உள்ளது.

தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரியும், அதற்கான அரணானையை ரத்து செய்யக்கோரியும் தி ஹிந்து தரப்பில் என்.ராம், கோலப்பன், பத்மநாபன், சித்தார்த் வரதராஜன் ஆகியோரும், நக்கீரன் தரப்பில் கோபால், முரசொலி தரப்பில் செல்வம், தினகரன் தரப்பில் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், டைம்ஸ் ஆஃப் இந்தியா தரப்பில் சுனில் நாயர், சந்தானகோபாலன், தினமலர் தரப்பில் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழக்குகளை தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது முரசொலி நாளிதழ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமேரசன், தலைவர்களின் கருத்துகளை பதிவு செய்யும் விதமாக பத்திரிக்கையில் செய்தி வெளியிடும்போது, அந்த கருத்துகளின் அடிப்படையில் தங்கள் மீது அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யபடுவதாக தெரிவித்தார்.

மேலும், இது பத்திரிகைகளின் கருத்து சுதந்திரத்தை நசுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தால் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அவதூறு தண்டனை சட்டத்தை இந்த அரசும் கடைபிடித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். மக்களின் கருத்துகளை பிரதிபலிக்கும் விதமாக செய்திகள் போடபட்டால் அவதூறு வழக்கு தொடரப்படுகிறது என்றும் வாதிட்டார்.

நக்கீரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி.பெருமாள், தனி நபர் மீது விமர்சனம் செய்து கருத்துகள் வெளியிட்டாலும் அரசின் செலவில் தான் இந்த அவதூறு வழக்குகள் பதியபடுகிறது என்பதால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக குறிப்பிட்டார். இந்து குழுமம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக அதிகளவில் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யபடுவதாக குறிப்பிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அப்துல் குத்தூஸ், அனைத்து வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பாடாமல் ஒத்தி வைத்தார். இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் முரசொலி நாளிதழ் உள்ளிட்ட நாளிதழ்களில் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்வதாக தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், பத்திரிகைகள் அவர்களின் கடமைகளை தான் செய்கிறார்கள் அப்படி இருக்கும்போது அவர்கள் மீது எப்படி அவதூறு வழக்கில் தாக்கல் செய்யப்படுகின்ற என்று கருத்து தெரிவித்த நீதிபதி பத்திரிகைகள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.