Tamilnadu
தொடர்ந்து ‘பப்ஜி’ கேம் விளையாடிய இளைஞருக்கு மாரடைப்பு - விபரீதம் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக் காரணமாக உலகம் முழுவதும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் தொலைக்காட்சி பார்ப்பது, செல்போன் பயன்படுத்துவது வீடியோ கேம் விளையாடுவது போன்ற செயல்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கியதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
அதுமட்டுமின்றி, ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்குவது போன்றவற்றால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் ஊரடங்கு நாட்களை கழிப்பதற்கு உலகம் முழுவதுமே பெரும்பாலானோர் வீடியோ கேம் விளையாட்டில் மூழ்கிவிடுகின்றனர். மக்கள் மத்தியில் பிரபலமடையும் வீடியோ கேம்கள் அவ்வப்போது விபரீதத்தை ஏற்படுத்தவும் தவறுவதில்லை. முன்னதாக வந்த ப்ளூவேல் வீடியோ கேம் போன்று தற்போது இளைஞர்களை ஆட்கொண்டு வருகிறது ‘பப்ஜி’ மோகம்.
இவை வெறும் விளையாட்டுகளாக மட்டும் இல்லாமல் பல்வேறு உடல் உபாதைகளையும் ஏற்படுத்திவிடுகின்றன. சில சமயங்களில் உயிரையும் காவு வாங்கும் அளவுக்கு அபாயகரமானதாக உள்ளன இது போன்ற விளையாட்டுகள்.
அவ்வகையில், ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த சதீஸ்குமார் எனும் 16 வயது இளைஞர் ஒருவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் ஊரடங்கு அமலான நாளில் இருந்து விடிய விடிய பப்ஜி கேம்மில் மூழ்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் வழக்கம் போல நேற்று முன்தினம் மதியம் வீட்டிற்கு அருகில் இடத்தில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். மகன் மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை குமார் மற்றும் குடும்பத்தினர் சதீஸ்குமாரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சதீஸ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கருங்கல்பாலையம் போலிஸார் இதுதொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர்.
நவீன காலத்தில் எல்லாத் தரப்பினரும் செல்போன்களை அதிகமாக உபயோகித்து வருகிறார்கள். இது மனநல, உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்தும். பெற்றோர் தங்களின் குழந்தைகளின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் கண்காணித்து, அவர்களுக்கு தேவையான ஓய்வு கிடைக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Also Read
-
"விரைவில் நடராஜன் இந்திய அணியில் இடம்பிடிப்பார்" - SRH பயிற்சியாளர் நம்பிக்கை !
-
நீட் வினாதாள் கசிவு - ”23 லட்சம் மாணவர்களின் கனவுகளை சிதைத்த மோடி அரசு" : ராகுல் காந்தி MP தாக்கு!
-
+2 தேர்வு முடிவுகள் : “குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
சாதிய வன்கொடுமைக்கு சாட்டையடி : +2 தேர்வில் நாங்குநேரி மாணவர் சாதனை!
-
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் கவனத்துக்கு: இ-பாஸ் விவரத்தை வெளியிட்ட தமிழ்நாடு அரசு !