Tamilnadu
எதிர்க்கட்சி MLA-க்கள் இல்லாமல் கூட்டம்: ‘இந்த நேரத்திலும் அரசியல் தேவையா?’ என கொதிக்கும் செந்தில் பாலாஜி
கொரோனா பாதிப்பு நாடுமுழுவதும் தீவிரமடைந்துள்ளது. கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டி கடந்து செல்லவிருக்கிறது. அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடுப்பு நடவடிக்கையால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களுக்கு தி.மு.க சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு நேரடியாக களத்திற்குச் சென்று உதவிகள் செய்யது வந்தாலும், அரசையும் உதவி செய்ய வலியுறுத்தி தி.மு.க எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் மாவட்ட அரசு நிர்வாகிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகனிடம் தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி இன்று நேரில் சென்று மனு ஒன்றை அளித்தார். அதில், கொரோனா பாதித்த மக்களுக்கு உணவு தேவைகள் மட்டுமல்லாது, வேலைவாய்ப்பு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் தேவைப்படுகிறது. இவற்றை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிறைவேற்றித் தரும்படி அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி, “கொரோனா பாதிப்பில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் தி.மு.க சார்பில் உருவாக்கப்பட்ட ‘ஒருங்கிணைவோம் வா’ அமைப்பு மூலம் கரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 829 குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது.
ஆனால் அதேசமயத்தில், கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க எந்த உதவியும் செய்யவில்லை. அதுமட்டுமின்றி, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த அரசு ஆலோசனை கூட்டத்துக்கு அரவக்குறிச்சி எம்.எல்.ஏ, குளித்தலை எம்.எல்.ஏ மற்றும் எம்.பி ஜோதிமணி ஆகியோரை அழைக்கவில்லை.
ஆனால், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏவை மட்டும் அழைத்துள்ளனர். பொறுப்புள்ள பதவியில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் பொறுப்பற்ற நிலையில் நடந்து கொள்கிறார். தொடர்ந்து ஆட்சியர், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம்... மவுனம் காக்கும் தவெக அரசு; விளாசிய உதயநிதி ஸ்டாலின்!
-
“திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயமா?; தவெக அரசு வேடிக்கைப் பார்க்கலாமா?”: ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
சிங்கப்பெண் அதிரடிப்படையில் தேர்வான பெண் காவலருக்கு டார்ச்சர்? - இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார்!
-
”கூடிய ’GenZ DMK’ கொள்கைக் கூட்டம்.. தைரியமாக களமாடுங்கள் திமுக உங்களுடன் என தெம்பூட்டிய கழக சட்டத்துறை”
-
வயிற்று வலியை தீர்க்கும் : கஞ்சா செடி வளர்த்து விற்பனை - தந்தை மகன் கைது!