Tamilnadu

“மதுபோதையில் பைக்கில் வேகமாக வந்த இளைஞர்கள்- தட்டிக்கேட்ட அண்ணன் கொலை; தம்பிக்கு வெட்டு”: அதிர்ச்சி தகவல்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சக்கரை செட்டியப்பட்டி புதுக்கடை காலனி பகுதியை சேர்ந்தவர் முருகன் என்பவரின் மகன் விஷ்ணு பிரியன். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன நிலையில், ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், தனது மனைவியுடன் சொந்த ஊரில் வந்து தங்கியுள்ளனர். இந்நிலையில், விஷ்ணுவும் அவரது தம்பியும் வீட்டின் அருகே இருந்த போது காமலாபுரத்தில் இருந்து நாலுகால் பாலம் செல்லும் தார் சாலையில் மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் அதிவேகமாக குடிபோதையில் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, அதிவேகமாக சென்றவர்களை பார்த்து மெதுவாக செல் என கூறியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் விஷ்ணுபிரியனை கத்தியால் குத்தி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அவரது தம்பி நவீன் தடுக்க வந்த போது அவரை தடியால் பலமாக தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர்.

அப்போது செல்லும் வழியிலேயே விஷ்ணுப்பிரியன் உயிரிழந்துள்ளார். தொடர்ந்த அவரது தம்பி நவீனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இதனிடையே, மதுபோதையில் வந்த வாலிபர்கள் இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்றனர். இதில் தமிழரசன் என்ற ஒரு வாலிபரை அந்த பகுதி பொதுமக்கள் பிடித்து கட்டி வைத்தனர்.

இதை அறிந்து ஓமலூர் போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடம் வந்த போலிஸார் வாலிபரை மீட்டு காரில் ஏற்றி காவல் நிலையம் செல்ல முற்பட்டனர். அப்போது பொதுமக்கள் வாகனத்தை விடாமல் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதையறிந்த டி.எஸ்.பி பாஸ்கர் சம்பவ இடம் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரவேண்டும் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாகாணிக்கர் சம்பவ இடம் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை கைது செய்வோம் என கொடுத்த வாக்குறுதியை தொடர்ந்து பொதுமக்கள் அந்த வாகனத்தை விடுவித்தனர். குற்றவாளிகள் விட்டுச் சென்ற இரண்டு மோட்டார் இரு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த ஓமலூர் போலிஸார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Also Read: மதுபோதையில் காரில் வேகமாக வந்து விபத்துஏற்படுத்திய இளைஞர்கள் - முதல் நாளே நடந்த அட்டூழியம்!