Tamilnadu

“ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு - கடை திறக்கவும் அனுமதி இல்லை” : விரக்தியில் சலூன் கடைக்காரர் தற்கொலை!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாகவர்த்த நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சிறு-குறு நிறுவனங்கள் மற்றும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளனர்.

இதனால் தினசரி வருமானத்தை வைத்து வாழ்க்கை நடத்திவந்த ஏராளமானோர் உணவுகே வழியில்லாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஊரடங்கில் சில கடைகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தளர்வுகள் அளித்து நிபந்தனையுடன் கடைகளை செயல்பட அனுமதி அளித்தனர்.

ஆனால், முடி திருத்தும் கடைகள், அழகு நிலையம் போன்ற கடைகளுக்கு அனுமதிவழங்கவில்லை. இதனால் அந்த தொழிலை நம்பியுள்ள பலரும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் கடைகள் திறக்க முடியாத விரக்தியில் சலூன் கடைக்காரர் ஒருவர் தற்கொலைச் செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தந்தை பெரியார் நகர் கட்டப்பொம்மன் தெருவைச் சேர்ந்தவர் பரணி. இவர் தரமணி எம்.ஜி.ஆர் சாலை பகுதியில் சலூன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். தந்தையை இழந்த பரணி அந்த கடையின் வருமானத்தை நம்பியே தாய், மனைவி மற்றும் 2 குழந்தைகளை பாதுகாத்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஊரடங்கால் கடை திறக்க முடியதால் வருமானமின்றி, சாப்பாட்டுக்கே வழியில்லாமல் பரணியின் குடும்பத்தினர் தவித்து வந்துள்ளனர். இதனிடையே, மே 3-ம் தேதிக்குப் பிறகு சலூன் கடைகளை திறக்க அனுமதிப்பார்கள் என நம்பிக்கையில் இருந்துள்ளார்.

ஆனால், அரசு அனுமதி வழங்காததால் இரண்டு நாட்களாக கடும் விரத்தில் பரணி இருந்துள்ளார். இந்நிலையில் மே 5ம் தேதி காலை 9 மணிக்கு கடைக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்றார். கடைக்குச் சென்று வெகுநேரமாகியும் பரணி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கடைக்குச் சென்று பார்த்துள்ளனர்.

அங்கு கடையின் ஷட்டர் பாதி மூடிய நிலையில் இருந்ததையடுத்து கடைக்குள் சென்று பார்த்தபோது கடையில் இருந்த மின்விசிறியில் கயிற்றில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் தரமணி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்குவந்த போலிஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பசி கொடுமை தாங்க முடியாமல் கணவன் - மனைவி தற்கொலை : கொரோனா ஊரடங்கால் தொடரும் கொடூரம்!