Tamilnadu
“உணவின்றி தவிக்கும் வேளையில் டாஸ்மாக் தேவையா?” : ஒரு கோடி பெண்களிடம் கருத்துக் கேட்கும் கரூர் எம்.பி!
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட உள்ளன. சென்னையை தவிர்த்து இதர மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்க உள்ளன. ஆனால் டாஸ்மாக் மதுபான கடைகளை தமிழக அரசு திறக்கக் கூடாது என அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
தமிழக அரசின் முடிவைக் கண்டித்து அனைத்து தரப்பினரும் கருப்பு சின்னம் அணியுமாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஒரு கோடி பெண்களிடம் மதுபான கடை திறப்பது குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருத்து கேட்கும் இயக்கத்தை கரூர் எம்.பி ஜோதிமணி தொடங்கியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த கரூர் எம்.பி ஜோதிமணி கூறுகையில், “கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் நோக்கில் கடந்த 45 நாட்களாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தது. இந்த நிலையில் மக்கள் வருமானம் இன்றி வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மக்களைப் பாதுகாப்பதில் அலட்சியம் காட்டும் தமிழக அரசு நாளை முதல் மதுபான கடைகளை திறக்க ஏற்பாடு செய்துள்ளது. இதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
மக்களுக்கு உணவு வழங்கினால் தொற்று பரவிவிடும் என தடுத்த அரசு, இன்று தொற்று பரவும் என்று தெரிந்தே மதுக்கடையை திறக்கிறது. மக்கள் அடிப்படை அத்தியாவசிய பொருட்கள், உணவு இன்றி தவித்துவரும் வேளையில் மதுக் கடைகளைத் திறப்பது தேவையில்லாத ஒன்று.
மதுக்கடை திறப்பது அறிந்த கிராமத்தில் உள்ள பெண்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு கண்ணீர் சிந்தி வருகின்றனர். எனவே காங்கிரஸ் எம்.பி என்ற முறையில் தமிழகம் முழுவதும் ஒரு கோடி பெண்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு மதுக்கடை திறப்பது குறித்து கருத்துக் கேட்டு வருகிறது.
இந்த கருத்துகளையும் Change.org என்ற வலைதளம் மூலம் பதிவு செய்யப்படும் கருத்துகளையும் சேர்த்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”